ஆப்நகரம்

நம்பகத்தன்மை வாய்ந்த மதிப்புமிக்க நண்பன் தாய்லாந்து: மோடி புகழாரம்

நம்பகத்தன்மை மற்றும் மதிப்பு வாய்ந்த நண்பன் தாய்லாந்து என பிரதமர் மோடி புகழாரம் தெரிவித்துள்ளார்.

TNN 17 Jun 2016, 5:38 pm
புதுதில்லி: நம்பகத்தன்மை மற்றும் மதிப்பு வாய்ந்த நண்பன் தாய்லாந்து என பிரதமர் மோடி புகழாரம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil thailand is a trusted and valued friend pm modi
நம்பகத்தன்மை வாய்ந்த மதிப்புமிக்க நண்பன் தாய்லாந்து: மோடி புகழாரம்


தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா, மூன்று நாள் அரசுமுறை சுற்றுப் பயணமாக கடந்த வியாழக்கிழமை இந்தியா வந்து சேர்ந்தார். இந்தியா வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதற்காக, இந்தியா வந்துள்ள தாய்லாந்து பிரதமருடன் அவரது மனைவி நரபோர்ன் சான்-ஓ-சா, அந்நாட்டின் அமைச்சர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்ட 46 பிரதிநிதிகளும் வந்துள்ளனர்.

இந்நிலையில், தாய்லாந்து பிரதமர் மற்றும் மோடி இடையேயான சந்திப்பு இன்று நடைபெற்றது. இரு நாட்டு தலைவர்களும் பல்வேறு தரப்பட்ட விவகாரங்களை விவாதித்தனர்.

அதனையடுத்து இருவரும் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது பேசிய மோடி கூறியதாவது: நம்பகத்தன்மை மற்றும் மதிப்பு வாய்ந்த நண்பன் தாய்லாந்து. தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இந்தியாவின் முக்கிய கூட்டாளி நாடுகளில் தாய்லாந்தும் ஒன்று. இரு நாடுகளின் உறவுகளும் காலாச்சார பாரம்பரியத்தால் பகிரப்பட்டது. இந்தியா - தாய்லாந்து ஆகிய நாடுகள் கடற்சார் அண்டை நாடுகளாகும். கடற்சார் துறைகளில் கூடுதல் ஒத்துழைப்புக்கு ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

மேலும், இந்தியா - தாய்லாந்து இடையேயான தொழில் கூட்டமைப்பை வரவேற்பதாக கூறிய மோடி, இந்தியா - மியான்மர் - தாய்லாந்து இடையேயான நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார்.

இந்தியா - தாய்லாந்து இடையேயான சுமார் 70 ஆண்டுகால தூதரக உறவை குறிப்பிடும் பொருட்டு, அடுத்த ஆண்டு முதல் இந்திய விழாக்கள் தாய்லாந்திலும், தாய்லாந்து விழாக்கள் இந்தியாவிலும் கொண்டாடப்படும் என மோடி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா பேசும்போது, மக்களுடன் மக்கள் தொடர்பில் தாய்லாந்து - இந்தியா இடையே எந்த பிரச்னையும் இல்லை என்றார். மேலும், இந்திய தொழில் முனைவோர் தாய்லாந்திலும், தாய்லாந்து தொழில் முனைவோர் இந்தியாவிலும் முதலீடு செய்யும் பொருட்டு ஊக்குவிக்க நானும், இந்திய பிரதமர் மோடியும் ஒப்புக் கொண்டுள்ளோம் என்றார்.

அடுத்த செய்தி