ஆப்நகரம்

அரசு விளம்பரங்களுக்கு தடை விதிக்க சொல்வதா? -சோனியாவுக்கு பத்திரிகைகள் சங்கம் கண்டனம்

ஊடக விளம்பரங்களுக்கு மத்திய அரசு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும் என்ற தனது பரிந்துரையை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடனே திரும்ப பெற வேண்டும் என்று இந்திய பத்திரிகைகள் சங்கம் (INS) வலியுறுத்தியுள்ளது.

Samayam Tamil 8 Apr 2020, 11:53 pm
கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்திற்கு தேவையான நிதிகளை திரட்டுவதற்கு, சிக்கன நடவடிக்கைகள் தேவை என்று கூறியுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இதற்காக 5 முக்கிய பரிந்துரைகளை அளித்தார்.
Samayam Tamil sonia


இதுதொடர்பாக அவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று (ஏப்ரல் 7) கடிதம் எழுதியுள்ளார். அதில் முக்கிய அம்சமாக, 'ஊடக விளம்பரங்களுக்காக ஆண்டுக்கு சராசரியாக ரூ.1,250 கோடியை மத்திய அரசு ஒதுக்குகிறது.

இந்த விளம்பரங்களை 2 ஆண்டுகளுக்கு ரத்து செய்ய வேண்டும். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் இந்த விளம்பரங்களை தடை செய்வதன் மூலம் கணிசமான தொகையை திரட்டலாம்' என்று அவர் யோசனை தெரிவித்திருந்தார்.

பரிந்துரையை திரும்ப வேண்டும்: சோனியாவுக்கு செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

சோனியாவின் இந்த அதிபுத்திசாலித்தனமான யோசனைக்கு இந்திய பத்திரிகைகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த சங்கத்தின் பொது செயலாளர் மேரி பால் இன்று வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

பொருளாதார மந்தநிலை, டிஜிட்டல் உலகின் தாக்கத்தால் பத்திரிகைகளின் விற்பனை மற்றும் விளம்பர வருமானம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பல்வேறு தொழில் நிறுவனங்கள் நெருக்கடியை சந்தித்து வருவதன் எதிரொலியாக, பத்திரிகைகள் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது.

இந்த நிலையிலும், தற்போதைய கொரோனா பேரிடர் காலத்தில் தங்களது உயிரை பணயம் வைத்து ஊடகவியலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவற்றையெல்லாம் சிறிதும் கருத்தில் கொள்ளாமல், ஊடகங்களுக்கான விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சோனியா காந்தி, பிரதமருக்கு பரிந்துரைத்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது.

தமது இந்த பரிந்துரையை அவர் உடனே திரும்பப் பெற வேண்டும். ஏனெனில், ஊடகங்களுக்கு விளம்பரங்கள் தருவதன் மூலம் மத்திய அரசுக்கு ஏற்படும் செலவு மிகவும் குறைவு என்று அந்த அறிக்கையில் மேரி பால் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி