ஆப்நகரம்

என்.ஐ.ஏ. கஸ்டடியில் ஸ்வப்னா... யாரையும் பாதுகாக்க மாட்டோம்: பினராயி அதிரடி

தங்கம் கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரள அரசு பாதுகாக்காது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 13 Jul 2020, 9:03 pm
கேரள மாநிலத்தில் தங்கக்கடத்தல் விவகாரம் பூதாகரமாகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகப் பெயரைப் பயன்படுத்தி தங்கம் கடத்தப்படுவதாக எழுந்துள்ள இந்த புகாரில் கேரள மாநில அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்த ஸ்வப்னா சுரேஷ் சிக்கியுள்ளார்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் தகவல் தொடர்புத் துறையில் பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ் இதில் சிக்கியுள்ளதால் இந்த விவகாரம் கேரள மாநிலத்தில் புயலை கிளப்பியுள்ளது. அம்மாநில எதிர்க்கட்சிகள் முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றனர்.

இது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை விசாரணையை தொடங்கிய என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஸ்வப்னா, சந்தீப் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. அத்துடன், தலைமறைவாக இருந்த ஸ்வப்னா சுரேஷ், அவரது நண்பர் சந்தீப் ஆகியோர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்து கொச்சி அழைத்து வரப்பட்ட அவர்களிடம் பல மணிநேரம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

''பிரதமரே வந்தாலும் தடுப்பேன்'' அமைச்சர் காரை நிறுத்திய பெண் போலீஸ் ராஜினாமா..!

தொடர்ந்து, அவர்கள் இருவரும் கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனிடையே, ஸ்வப்னாவை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் நீதிமன்றத்தின் அனுமதியை நாடினர். அதனை விசாரித்த நீதிமன்றம் ஸ்வப்னாவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிலையில், தங்கம் கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரள அரசு பாதுகாக்காது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும், என்.ஐ.ஏ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி