ஆப்நகரம்

நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தம்: போக்குவரத்து, வங்கி சேவைகள் பாதிப்பு

மத்திய அரசின் தொழிலாளர் நல மசோதாவில் திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

TNN 2 Sep 2016, 7:47 am
டெல்லி: மத்திய அரசின் தொழிலாளர் நல மசோதாவில் திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
Samayam Tamil trade union strike today likely to hit banking transport
நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தம்: போக்குவரத்து, வங்கி சேவைகள் பாதிப்பு


அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும், வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை வேண்டும், தொழிலாளர்களுக்கு அடிப்படை மாத ஊதியத்தை ரூ.18 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும், குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மத்திய அரசிடம் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வந்தன.

தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர்கள் எச்சரித்தனர். இதையடுத்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் குழு அமைக்கப்பட்டு, பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இவர்களின் வேண்டுகோளை ஏற்க தொழிற்சங்கங்கள் மறுத்துவிட்டன. எனவே அறிவித்தபடி, இன்று நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தால் தமிழகத்தில் பேருந்து, ரயில் சேவைகளின் பாதிப்பு இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கி ஊழியர்களின் 8 சங்கங்களைச் சேர்ந்த 6 லட்சம் பேர் போராட்டத்தில் பங்கேற்கின்றனர். இதனால் வங்கிச் சேவைகள் பெருமளவு பாதிக்கப்படும்.

பொது வேலைநிறுத்தத்தால் அத்தியாவசியப் பொருட்களின் சேவை பாதிக்கக்கூடாது என்று மத்திய அமைச்சகங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பாதிக்கப்படும் வகையில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி