ஆப்நகரம்

ஆரோக்கிய சேதுவை உருவாக்கியது யார்? அரசு விளக்கம்!

ஆரோக்கிய சேது ஆப்பை உருவாக்கியது யார் என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

Samayam Tamil 28 Oct 2020, 8:43 pm

கொரோனா பாதிப்பு இந்தியாவில் வேகமாக பரவத் தொடங்கியபோது, தொற்று பரவலை கண்காணிப்பதற்காக மத்திய அரசு சார்பில் ஆரோக்கிய சேது ஆப் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை கோடிக்கணக்கான இந்தியர்கள் மொபைலில் பயன்படுத்தி வருகின்றனர்.
Samayam Tamil Aarogya Setu


கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் யாருடன் தொடர்பில் இருந்தனர் என்பதை கண்டறிய ஆரோக்கிய சேது ஆப் பெரிதும் உதவுகிறது. இன்னும் சொல்லப்போனால், ஆரோக்கிய சேது ஆப்பை உலக சுகாதார மையமே பாராட்டியுள்ளது.

இந்நிலையில், ஆரோக்கிய சேது ஆப்பை உருவாக்கியது யார் என்ற தகவலே மத்திய அரசிடம் இல்லை என தெரியவந்துள்ளது. ஆரோக்கிய சேது இணையதளத்தில் தேசிய தகவலியல் மையமும், ஐடி அமைச்சகமும் இணைந்து ஆப்பை தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர்...பூமியின் சொர்க்கத்தில் இடம் வாங்க ஆசை..!

ஆரோக்கிய சேது ஆப்பை யார் உருவாக்கியது என அறிந்துகொள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பதிலளித்த தேசிய தகவலியல் மையமும், ஐடி அமைச்சகமும் ஆரோக்கிய சேது ஆப்பை உருவாக்கியது யார் என தகவல் இல்லை என்று தெரிவித்துள்ளன.

இதுகுறித்து மத்திய அரசுக்கு மத்திய தகவல் ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீஸில், “அதிகாரிகள் தகவல் வழங்க மறுப்பதை ஏற்கமுடியாது. ஆப்பை யார் உருவாக்கியது, தகவல்கள் எங்கே இருக்கின்றன என எந்தவொரு தலைமை பொது தகவல் அலுவலர்களுக்கும் தெரியவில்லை. இது மிகவும் சீரியஸான விஷயம்” என்று தெரிவித்துள்ளது. இவ்விவகாரத்தில் தொடர்புடைய அரசு துறைகள் மத்திய தகவல் ஆணையம் முன் நவம்பர் 24ஆம் தேதி ஆஜராக வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆரோக்கிய சேது சர்ச்சை குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆரோக்கிய சேது அரசு-தனியார் கூட்டணியில் உருவாக்கப்பட்டதாகவும், இதுபற்றிய தகவல்கள் ஆரோக்கிய சேது இணையதளத்திலேயே இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், ஆரோக்கிய சேது ஆப்பை 16.23 கோடி பேர் டவுன்லோடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி