ஆப்நகரம்

நவம்பர் 1 முதல் மாறும் ரூல்ஸ்; சாமானியர்கள் வாழ்வை புரட்டி போடும் விஷயங்கள்!

பொதுமக்களின் அன்றாட வாழ்வை நேரடியாக பாதிக்கும் வகையில் நிகழும் மாற்றங்கள் குறித்து இங்கே விரிவாக காணலாம்.

Samayam Tamil 31 Oct 2020, 4:41 pm
சிலிண்டர் விநியோகம், ரயில்கள் நேர மாற்றம், எல்.பி.ஜி விலை நிர்ணயம், வங்கி சேவைக்கு கட்டணம் என பல்வேறு புதிய மாற்றங்கள் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இது சாமானியர்களின் வாழ்வில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. எனவே இதைப் பற்றி அனைவரும் விரிவாக அறிந்திருக்க வேண்டியது அவசியம்.
Samayam Tamil what are the rules will be changed from november 1st to impact common people
நவம்பர் 1 முதல் மாறும் ரூல்ஸ்; சாமானியர்கள் வாழ்வை புரட்டி போடும் விஷயங்கள்!


சிலிண்டர்கள் வாங்க ஓடிபி கட்டாயம்

எரிவாயு சிலிண்டர்கள் வாங்கும் போது வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் மூலம் பதிவு செய்வர். இதையடுத்து அவர்களின் வீடுகளுக்குச் சென்று சிலிண்டர் விநியோகம் செய்யப்படும். வழக்கமாக ரசீதில் கையெழுத்து வாங்கிக் கொண்டு சிலிண்டரை விநியோகம் செய்துவிட்டு ஊழியர்கள் கட்டணம் பெற்றுச் செல்வர். இனி OTP-ம் தேவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரும் நவம்பர் ஒன்றாம் தேதி அமலுக்கு வருகிறது. முதல்கட்டமாக நாட்டின் 100 ஸ்மார்ட் நகரங்களில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய நடைமுறையை DAC என்று எண்ணெய் நிறுவனங்கள் அழைக்கின்றன. சிலிண்டர் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களின் மொபைல் எண்களுக்கு OTP எனப்படும் ஒன் டைம் பாஸ்வேர்டு வரும்.

இதைக் காண்பித்தால் மட்டுமே இனி சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படும். எரிவாயு சிலிண்டர்களை முறைகேடான வகையில் விநியோகித்தல் மற்றும் பயன்படுத்துதலை தடுப்பதற்காக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை வாடிக்கையாளர்களின் மொபைல் எண்ணிற்கு OTP வரவில்லை எனில், சிலிண்டர் போடுவதற்கு வரும் நபர்கள் ஆப் மூலம் உடனடியாக OTP வருவதற்கு ஏற்பாடு செய்வார்கள். இந்த மாற்றத்தால் முகவரி அல்லது மொபைல் எண் தவறுதலாக அளித்திருப்பவர்களுக்கு சிக்கல் ஏற்படும். அவர்களுக்கு சிலிண்டர்கள் விநியோகிக்க முடியாத நிலை உண்டாகும்.

இண்டேன் கேஸ் புக்கிங் எண் மாற்றம்

இண்டேன் எரிவாயு சிலிண்டர்கள் முன்பதிவு செய்வதற்கு புதிதாக ஒரு எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 7718955555 என்ற எண்ணிற்கு SMS அல்லது கால் செய்ய வேண்டும். நாடு முழுவதும் இதே எண் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. பொதுமக்கள் எந்தப் பகுதியில் வசித்தாலும் மேற்கூறிய எண்ணைத் தொடர்பு கொண்டு இண்டேன் எரிவாயு சிலிண்டர்கள் பெறுவதற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். இது வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வருகிறது.


இலவச கொரோனா தடுப்பூசி அறிவிப்பில் விதிமீறலா? தேர்தல் ஆணையம் பதில்!

எல்.பி.ஜி விலை நிர்ணயம்

ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளன்று எல்.பி.ஜி விலையை நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்பட உள்ளது. முன்னதாக பெட்ரோல், டீசல் விலையும் மாதம் இருமுறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. அதன்பிறகு சர்வதேச சந்தைக்கு ஏற்ப நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறை பயன்பாட்டிற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்

தலைநகர் டெல்லியில் குறிப்பிட்ட இடங்களில் சோதனை ஓட்ட முறையில் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் (HSRP) மற்றும் கலர் கோடட் ஸ்டிக்கர்களை ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்யும் வசதி வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்காக SIAM என்ற இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம். புதுப்பிக்கப்பட்ட இணையதளம் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வருகிறது.


HSRP மற்றும் கலர் கோடட் ஸ்டிக்கர்களை முன்பதிவு செய்ததில் இருந்து வீட்டிற்கு வரும் வரை ஒவ்வொரு படிநிலையும் SMS மூலம் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேரடியாக சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு சென்றும், வீட்டிற்கு வந்து டெலிவரி செய்யும் வகையிலும் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ரயில் நேரங்களில் மாற்றம்

வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை ஒன்றாம் தேதி ரயில்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்படும். ஆனால் நடப்பாண்டு கொரோனா தொற்று காரணமாக ரயில்வே நிர்வாகம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.


இந்நிலையில் புதிய நேர மாற்றம் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகின்றது. தற்போது சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. எனவே புதிய நேர மாற்றங்களால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. கொரோனா சூழலைக் கருத்தில் கொண்டு அனைத்து ரயில்களும் பயன்பாட்டிற்கு வரும் போது தான் நேர மாற்றங்கள் பொதுமக்களின் வாழ்வில் பிரதிபலிக்கும்.

மீண்டும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ்

வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் டெல்லி - சண்டிகர் இடையிலான அதிவேக தேஜாஸ் எக்ஸ்பிரஸ் மீண்டும் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் மேற்குறிப்பிட்ட நகரங்களை மூன்று மணி நேரத்தில் கடந்து சென்று விடுகிறது. இது புதன்கிழமை தவிர்த்து வாரத்தின் மற்ற அனைத்து நாட்களிலும் இயக்கப்படுகிறது. டெல்லியில் காலை 9.40 மணிக்கு புறப்பட்டு, சண்டிகருக்கு நண்பகல் 12.40 மணிக்கு சென்றடைகிறது. இதேபோல் சண்டிகரில் பிற்பகல் 2.35 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு டெல்லி ரயில் நிலையம் சென்றடைகிறது.


இந்தளவிற்கு விலை குறைச்சாச்சு; மது பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

காய்கறிகளுக்கு MSP நிர்ணயம்

கேரள மாநிலத்தில் விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை (MSP) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் விளைபொருட்களுக்கு MSP நிர்ணயித்த முதல் மாநிலம் என்ற பெருமை கேரளாவைச் சேரும். இந்த நடைமுறை வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

வங்கிகளில் இலவச சேவை கிடையாது

வங்கிகளில் பணம் டெபாசிட் செய்வதும், பணம் எடுப்பதும் இலவச சேவையாக இருந்து வருகிறது. இந்நிலையில் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் இந்த சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. சேமிப்பு கணக்குகளில் மூன்று முறை பணம் போட்டால் எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது. ஆனால் நான்காவது முறை பணம் போடும் போது வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.40 சேவைக் கட்டணமாக பிடித்தம் செய்யப்படும். இந்த புதிய மாற்றத்தை பேங்க் ஆப் பரோடா அமல்படுத்தியுள்ளது. இதேபோல் பேங்க் ஆப் இந்தியா, பி.என்.பி, ஆக்சிஸ், சென்ட்ரல் பேங்க் ஆகிய வங்கிகள் விரைவில் அமல்படுத்த திட்டமிட்டுள்ளன.

அடுத்த செய்தி