ஆப்நகரம்

பிரதமர் மோடியுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திப்பு: என்ன பேசினார்?

தலைநகர் டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார்

Samayam Tamil 4 Nov 2020, 9:08 pm
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிரான மனப்பான்மை தமிழகத்தில் நிலவி வருகிறது. மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், தமிழக அரசே நிர்வாக அதிகாரத்தின் படி கொள்கை முடிவெடுத்து அரசாணையை வெளியிட்டது. இதையடுத்து, ஆளுநர் உடனே அதற்கு ஒப்புதல் அளித்தார்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


அதேபோல், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் வாடும் எழுவர் விடுதலையில் தமிழக அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனினும், ஆளுநர் முடிவெடுக்காத காரணத்தால் அவர்களது விடுதலையில் இன்றளவும் இழுபறி நிலவி வருகிறது.

இது தொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணையின் போது 7 தமிழர் விடுதலை குறித்து முடிவெடுப்பதில் ஆளுநர் தேவையற்ற காலதாமதம் செய்வதை அனுமதிக்க முடியாது. இந்த விஷயத்தில் ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.

ஆளுநரின் டெல்லி பயணம் - காரணம் என்ன?

இதனிடையே, ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நேற்று சந்தித்த நிலையில், சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு ஆளுநர் புறப்பட்டு சென்றுள்ளார். வருகிற வெள்ளிக்கிழமை வரை டெல்லியில் இருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் அமித்ஷா, உள்துறை செயலாளர் ஆகியோரை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது, எழுவர் விடுதலை, தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை உள்ளிட்டவைகள் குறித்து பிரதமரிடம் ஆளுநர் விளக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த செய்தி