ஆப்நகரம்

ராஜ்யசபாவில் இன்று நடந்தது வெட்கக்கேடானது: ராஜ்நாத் சிங் வேதனை

மாநிலங்களவையில் இன்று நடந்த வெட்கக்கேடானது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேதனை தெரிவித்துள்ளார்

Samayam Tamil 20 Sep 2020, 8:02 pm
நாடாளுமன்ற மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்களை தாக்கல் செய்து குரல் வாக்கெடுப்பு மூலம் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. முன்னதாக, இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எம்.பி.க்கள், மாநிலங்களவையின் மைய மண்டபத்துக்கு வருகை தந்து அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
Samayam Tamil ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்


மேலும், அவை விதிமுறைகள் அடங்கிய புத்தகம் உள்ளிட்ட காகிதங்களை கிழித்து துணை சபாநாயாகர் முகத்தில் எரியவும், சபாநாயகரின் மைக்கை உடைக்கும் முயற்சிகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்களை அவைக்காவலர்கள் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்ற முயற்சித்தனர். இதனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மசோதாக்களை விவாதத்திற்கு அனுமதிக்காதது ஜனநாயகத்தை நெரிக்கும் செயல் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

இந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநிலங்களவையில் இன்று நடந்த விஷயங்கள் துரதிர்ஷ்டவசமானது, வெட்கக்கேடானது. சபையில் கலந்துரையாடல்களை நடத்துவது ஆளும் தரப்பினரின் பொறுப்பாகும், ஆனால் அதனுடைய மாண்பை பராமரிப்பது எதிர்க்கட்சியின் கடமையாகும். எதிர்க்கட்சிகள் பொறுப்புடன் நடந்து கொண்டிருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

வேளாண் மசோதா: விவசாயிகளுக்கு பிரதமர் பாரட்டு; விவசாயிகள் போரட்டம்!

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இதுபோன்ற சம்பவங்கள் வரலாற்றில் ஒருபோதும் நடந்ததில்லை என தெரிவித்த ராஜ்நாத் சிங், அதுவும் மாநிலங்களவையில் இதுப்போன்ற சம்பவங்கள் நடப்பது மிகப்பெரிய விஷயம். இன்று நடைபெற்ற சம்பவங்கள் சபை மாண்புக்கு எதிரானது என்றும் தெரிவித்தார்.

வதந்திகளின் அடிப்படையில் விவசாயிகளை தவறாக வழிநடத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய ராஜ்நாத் சிங், குறைந்தபட்ச ஆதார விலை முறை தொடரும் என்றும், விவசாய உற்பத்தி சந்தைக் குழுவும் தொடரும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

ராஜ்யசபா துணை சபாநாயகர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்கிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், மாநிலங்களவை தலைவருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் ஒரு முடிவை எடுப்பார். அரசியல் ரீதியாக நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. அது தொடர்பாக முடிவெடுக்கும் முழு உரிமையும் அவருக்கு இருக்கிறது என்றார்.

பாஜக கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம் கட்சியின் எம்.பி.யான ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா தொடர்பான கேள்விக்கு, “இதுபோன்ற ஒவ்வொரு முடிவுக்கும் பின்னால் சில அரசியல் காரணங்கள் உள்ளன. அவர் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை” என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி