ஆப்நகரம்

காந்தி ஜெயந்தி 2020: இந்த நாளின் சிறப்பு தெரியுமா உங்களுக்கு...?

ஆண்டுதோறும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த நாளின் சிறப்புகள் என்னவென்று தெரிந்து காணலாம்.

Samayam Tamil 2 Oct 2020, 7:11 am
வெள்ளையர்களின் ஆட்சியின் கீழ் அடிமை தேசமாக இருந்த இந்தியா, சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்று ஏராளமான தலைவர்கள் போராடினர். அவர்களில் முதன்மையானவர் காந்தி. இந்தியாவின் தந்தை என்று அன்போடு அழைக்கப்படும் அளவிற்கு சிறப்பு பெற்றவர். இந்திய சுதந்திர போராட்டத்தில் அளப்பறிய பங்காற்றியது மட்டுமின்றி அகிம்சை, உண்மை உள்ளிட்ட பல்வேறு நற்பண்புகளையும் கற்றுத் தந்திருக்கிறார். நடப்பாண்டு அக்டோபர் 2ஆம் தேதி மகாத்மா காந்தியின் 151வது பிறந்த நாள் என்பது கூடுதல் சிறப்பு. இவரது பிறந்த நாளை காந்தி ஜெயந்தி என்ற பெயரில் நாம் கொண்டாடி வருகிறோம்.
Samayam Tamil Gandhi


இந்த நாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் காந்தியை நினைவு கூறும் வகையில் பல்வேறு கூட்டங்கள், சொற்பொழிவுகள் நடத்துவது வழக்கம். குறிப்பாக இளைஞர் அமைப்புகள் கூடி வீதிப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு காந்தியின் கொள்கைகளை பரப்புவர்.

அவரது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை நாடகங்களாக நடத்திக் காட்டுவர். ஆனால் இம்முறை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கூட்டங்கள் நடத்துவது சாத்தியமில்லை. எனவே ஆன்லைன் வாயிலாக காந்தி தொடர்பான நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் தவறாமல் கலந்து கொள்ளுங்கள். இந்த நன்னாளில் அவரது போராட்டங்கள், வழிகாட்டுதல்கள், படைப்புகள் உள்ளிட்டவை நினைவு கூற வேண்டியது அவசியம். இந்த ஒருநாள் மட்டுமின்றி ஒவ்வொரு நாளும் கொண்டாடப்பட வேண்டியவர் காந்தி.

காந்தி ஜெயந்தி: 23 மாவட்டங்களில் 1.16 லட்சம் மரக்கன்றுகள் நட ஈஷா திட்டம்

அக்டோபர் 2, 1869ல் குஜராத் மாநிலம் போர்பந்தரில் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பிறந்தார். சிறு வயது முதல் தேசத்தின் மீது மிகுந்த பற்று கொண்டிருந்தார். வழக்கறிஞராக வாழ்வை தொடங்கினாலும் தனது கோட்பாடுகளினால் உலக மக்கள் அனைவரையும் ஈர்த்தவர்.

இந்திய சுதந்திரத்திற்காக நாட்டு மக்களை ஒன்றுபடச் செய்தவர். அமைதி, அகிம்சையை பெரிதும் விரும்பினார். பிரிட்டிஷார் ஆட்சிக்கு எதிராக 1930ல் நடந்த தண்டியாத்திரை மற்றும் 1942ஆம் ஆண்டு நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கம் காந்தி முன்னெடுத்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகள் ஆகும். சாதிய ஒடுக்குமுறை, தீண்டாமை ஆகியவற்றுக்கு எதிராகவும் குரல் கொடுத்தவர்.

அடுத்த செய்தி