ஆப்நகரம்

திருப்பதி ஏழுமலையான் தரிசனம்: இலவச டோக்கன் எங்கு கிடைக்கிறது தெரியுமா?

திருப்பதி கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் இலவச டோக்கன் எங்கு பெற வேண்டும் என்று இங்கே காணலாம்.

Samayam Tamil 30 Oct 2020, 9:03 am
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் ஏழுமலையான் கோயில் அமைந்துள்ளது. கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஏழு மலைகளைத் தாண்டிச் சென்று ஏழுமலையானை தரிசிக்க வேண்டும். தென்னிந்தியா முழுவதும் ஏழுமலையானுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் இருக்கின்றனர். வெளிமாநிலங்கள் மட்டுமல்லாது வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்கின்றனர். தங்கள் கோரிக்கையை கடவுள் நிறைவேற்ற வேண்டும் என்று வேண்டி தலைமுடியை காணிக்கையாக அளித்துச் செல்கின்றனர்.
Samayam Tamil where will get the free darshan tokens for tirupati temple darshan
திருப்பதி ஏழுமலையான் தரிசனம்: இலவச டோக்கன் எங்கு கிடைக்கிறது தெரியுமா?


திருமலையில் கொரோனா பாதிப்பு

இந்த கோயிலில் அளிக்கப்படும் லட்டு பிரசாதம் மிகவும் பிரபலமானது. இது பிரத்யேக சுவை கொண்டது. இதற்காகவே மலை ஏறி வருபவர்களும் இருக்கிறார்கள். கொரோனா உலகையே முடக்கிய நிலையில், ஏழுமலையான் தரிசனத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் திருப்பதி மலையில் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. அதேசமயம் ஏழுமலையானுக்கு செய்யும் வழக்கமான பூஜைகள் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பக்தர்களுக்கு அனுமதி

பின்னர் படிப்படியாக அறிவிக்கப்பட்ட தளர்வுகளின் படி, திருமலையில் சாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதிகளவில் பக்தர்கள் வருகை புரிந்ததாலும், கொரோனா கட்டுப்பாடுகள் மீறப்பட்டதாலும் நிலைமை விபரீதமானது. பக்தர்கள், கோயில் நிர்வாகிகள் உள்ளிட்ட பலருக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டது. இதையடுத்து கட்டுப்பாடுகளில் மிகவும் தீவிரம் காட்டிய திருப்பதி தேவஸ்தானம், சாமி தரிசனத்திற்கு தொடர்ந்து அனுமதி அளித்து வருகிறது.


ஹேப்பி நியூஸ்: திருப்பதியில் இலவச தரிசனம்!

கட்டண தரிசனம் மட்டும் அனுமதி

இலவச தரிசன டோக்கன்கள் பெறுவதற்கு பக்தர்கள் கூட்ட நெரிசலுடன் வந்ததால் கொரோனா அச்சம் ஏற்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு இலவச தரிசனத்திற்கு திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்தது. பக்தர்கள் வருகையை கட்டுப்படுத்தும் வகையில் கட்டண தரிசனத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. இதற்காக ஆன்லைனில் ரூ.300 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஆன்லைனில் தரிசனம்

ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீபலங்கார சேவை உள்ளிட்டவற்றிற்கு ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த சேவை வரும் நவம்பர் மாதம் முதல் தொடங்கப்படவுள்ளது. இதன்மூலம் பக்தர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் நேரடியாக நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். இதனை சிறப்பு கட்டணம் செலுத்த வேண்டும்.

இலவச தரிசனத்திற்கு அனுமதி

இதற்கிடையில் இலவச தரிசனத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கான டோக்கன்களை பெற்றுச் செல்பவர்கள் மட்டுமே திருமலையில் அனுமதிக்கப்படுகின்றனர். நாள்தோறும் 3,000 இலவச டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.


எத்தனை கோடி தெரியுமா? பிரம்மோற்சவ வசூலில் களைகட்டிய திருப்பதி கோயில்!

இலவச டோக்கன்கள் எங்கு கிடைக்கும்?

பக்தர்கள் இலவச தரிசன டோக்கன்களை திருப்பதி அலிபிரி பேருந்து நிலையம் அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸில் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டண தரிசனத்தால் தங்கள் திருப்பதி பயணத்தை தள்ளி போட்டிருந்த பக்தர்களுக்கு இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வரும் நாட்களில் கொரோனா நிலவரத்தைக் கருத்தில் கொண்டு டிக்கெட்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படவுள்ளது.

அடுத்த செய்தி