ஆப்நகரம்

Happy Engineers Day 2020: விஸ்வேஸ்வரய்யா இந்தியப் பொறியியல் மேதை ஆன கதை!

பிரிட்டிஷ் அரசாங்கமே புகழும் வண்ணம் விஸ்வேஸ்வரய்யா இந்திய பொறியியல் துறைக்கு அப்படியென்ன செய்தார் என்று இங்கே காணலாம்.

Samayam Tamil 15 Sep 2020, 7:40 am
கர்நாடக மாநிலம் சிக்கபல்லபுரா மாவட்டத்தில் உள்ள முத்தெனஹள்ளி கிராமத்தில் 1860ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி பாரத ரத்னா சர் மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யா பிறந்தார். சிக்பல்லபூரில் தனது தொடக்கக் கல்வியை முடித்த பிறகு பெங்களூரு வந்து சேர்ந்தார். அங்கு உயர்கல்வி கற்றார். பின்னர் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பி.ஏ பட்டம் பெற்றார். இதையடுத்து புனே சென்று காலேஜ் ஆப் சயின்ஸில் சேர்ந்து சிவில் பொறியியல் படிப்பு படித்தார். இதனைத் தொடர்ந்து மும்பையின் பொதுப்பணித்துறையில் சேர்ந்து தனது பணியைத் தொடங்கினார்.
Samayam Tamil M. Visvesvaraya


* 1903ஆம் ஆண்டு புனே அருகேவுள்ள கடக்வஸ்லா நீர்த்தேக்கத்திற்கு தானியங்கி மதகுகள் கட்டிக் கொடுத்தார். தானியங்கி மதகுகள் கட்டுவதில் வல்லவராக திகழ்ந்ததால் ”மதகுகளின் தந்தை” என்று புகழப்பட்டார். தனது வடிவமைப்புகளுக்கு காப்புரிமை பெற்றுக் கொண்டார். பின்னர் குவாலியரில் டிக்ரா மற்றும் மைசூருவில் கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலும் மதகுகளை நிறுவினார்.

* ஐதராபாத்தில் வெள்ளப் பாதுகாப்பு அமைப்பை சிறப்பான தொழில்நுட்பத்துடன் அமைத்தார். விசாகப்பட்டினத்தில் கடல் அரிப்பை தடுக்கும் அமைப்பை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றினார்.

* 1894ஆம் ஆண்டு மைசூருக்கு அருகே சிவசமுத்திரத்தில் ஆசியாவின் முதல் நீர்மின் உற்பத்தி ஆலை அமைய காரணமாக இருந்தவர். திருப்பதியில் இருந்து திருமலைக்கு சாலை அமைக்கும் திட்டப்பணிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

* 1912 - 1918 காலக்கட்டத்தில் மைசூரு திவானாக இருந்தார். அப்போது தனியார் முதலீட்டை பெரிதும் ஊக்குவித்தார். இந்நகரை சிறப்பான முறையில் கட்டமைத்ததால் ”நவீன மைசூருவின் தந்தை” என்று அழைக்கப்பட்டார்.

* மைசூரு திவானாக இருந்த போது பத்ராவதி எஃகு ஆலை, பெங்களூரில் ஸ்ரீ ஜெயசாமராஜேந்திரா பாலிடெக்னிக் நிலையம், மைசூரு பல்கலைக்கழகம், கர்நாடகா சோப் & டிடர்ஜன்ட் நிறுவனம் மற்றும் பல்வேறு ஆலைகள் அமைக்கப்பட்டன.

கௌரி லங்கேஷ்: வலிமையான பேனாவின் வாழ்வழிந்த நாள்

* 1915ஆம் ஆண்டு நான்காம் ஜார்ஜ் மன்னரால் பிரிட்டிஷ் நைட்வுட் பட்டம் வழங்கப்பட்டது. அதிலிருந்து ”சர்” என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டு வந்தார்.

* 1917ஆம் ஆண்டு பெங்களூருவில் அரசு பொறியியல் கல்லூரி அமைவதில் முக்கிய காரணமாக இருந்தார். இதையொட்டி அந்த கல்லூரிக்கு ”விஸ்வேஸ்வரய்யா பொறியியல் கல்லூரி” என்று பெயரிடப்பட்டது.

* 1955ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

* கிராமங்களைத் தொழில் மயமாக்குதல், இந்திய தொழில் வளர்ச்சி, இந்தியப் பொருளாதாரம், Memoirs of My Working Life என்ற சுயசரிதை நூல், Reconstructing India, Nation Building, Prosperity Through Industry உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.

இத்தகைய சிறப்புகளுக்கு உரிய பாரத ரத்னா சர் மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யா-வின் பிறந்தநாளை ஆண்டுதோறும் நாம் “பொறியியல் தினமாக” கொண்டாடி வருகிறோம்.

அடுத்த செய்தி