ஆப்நகரம்

மிரட்டி வரும் சீதோஷண மாற்றமும், அதிர வைக்கும் உண்மைகளும்...!!

நாடு தற்போது பருவநிலை மாற்றத்தை எதிர்கொண்டு, ஒரு பக்கம் கடும் வெயில், பலத்த மழை, வெள்ளம் ஆகியவற்றை சந்தித்து வருகிறது. இதற்கு காரணம் சீதோஷண நிலை மாற்றம் என்று கூறப்படுகிறது. முன்பை விட தென்னிந்திய மாநிலங்களில் வழக்கத்திற்கு மாறாக புயலின் தாக்கமும் அதிகரித்து வருகிறது.

Samayam Tamil 12 Aug 2019, 2:09 pm
கடந்தாண்டு கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் அதிதீவிர மழை பெய்து, பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, கேரள மாநிலமே வெள்ளத்தில் மிதந்தது. இதற்கு காரணமாக, மலைப்பகுதிகளில் மரங்களை அழித்தது, கனிம வளங்களை சுரண்டியது போன்ற காரணங்கள் கூறப்பட்டன.
Samayam Tamil Kerala rain


இந்த நிலையில் நடப்பாண்டிலும் கேரளா, கர்நாடகா, சட்டீஸ்கர், ஒடிசா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களை கன மழை புரட்டிப் போட்டு வருகிறது. கடந்தாண்டு வெள்ளத்தில் மிதந்த கேரளா தற்போதும் வெள்ளத்தில் மிதந்து வருகிறது. வீடுகளை, உடைமைகளை இழந்த மக்கள் சரி செய்து அமருவதற்குள், மீண்டும் கனமழை வந்து அவர்களது வாழ்வாதாரத்தை சீரழித்துள்ளது.

மேற்குதொடர்ச்சியை ஒட்டிய பகுதிகளில் கடந்தாண்டும் நல்ல மழை பெய்து இருந்தது. நடப்பாண்டிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சி பகுதியில் கடந்த 4ஆம் தேதியில் இருந்து 4 நாட்களில் 248 செ,.மீ., மழை பெய்து இருந்தது. இன்னும் அடுத்த இரண்டு நாட்களுக்கு கோவை மற்றும் நீலகிரியில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

பொளந்து கட்டும் கன மழை; ரத்து செய்யப்பட்ட ரயில்கள், விமானங்கள் - முழு பட்டியல் இதோ!

கடந்த மாதம் இறுதி வரை பற்றாக்குறை மழை பெய்து வந்த கேரளாவில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல், ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை 22% அதிக மழை பெய்துள்ளது.

பருவமழை கால கட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதும் இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் சீதோஷண மாற்றத்திற்கு மேற்கில் இருந்து வீசிய காற்றின் திசை மாற்றம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி வரை குளிர் காற்று வீசிக் கொண்டு இருந்தது. இதற்கு காரணம் சரியான அளவில் மேற்கு திசை காற்று இல்லை என்று கூறப்படுகிறது.

காலையில் 1.65 லட்சம்; இப்போ 2.10 லட்சம்; மிரட்டும் காவிரி - மெர்சல் காட்டும் மேட்டூர் அணை!

எப்போதும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 5 முறை கடுமையான மேற்கு திசை காற்று இருக்கும். ஆனால், இந்த முறை ஒரே ஒரு முறை தான் இருந்துள்ளது. இது உத்தரகண்ட், ஜம்மு காஷ்மீர், இமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை மிகவும் பாதித்துள்ளது.

மளமளவென உயரும் மேட்டூர் அணை- பாசனத்திற்காக தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு!

குறிப்பாக கடந்தாண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குளிர் வாட்டி வதைத்துள்ளது.

மேலும் இந்தியப் பெருங்கடலில் இருந்து வந்த காற்றில் ஈரப்பதம் குறைந்துள்ளது. பூமியை சுற்றி இருக்கும் POLAR VORTEX எனப்படும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் குளிர்ந்த காற்றுக்கான பகுதியானது சிறிய மூன்று பகுதிகளாக உடைந்து இருக்கிறது என்று புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுவும் பருவ மாற்றத்திற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்த முறை மேற்கு திசை காற்று சரியான நேரத்தில் உருவாகாமல், தென்மேற்கு பருவமழையை தாமதப்படுத்தியது. மேலும், பருவமழை துவங்குவதற்கு முன்பு வரை வாயு புயல் கடல் பகுதியில் இடம் மாறி சென்று பருவமழையை தாமதிக்க வைத்தது.

இது மட்டுமின்றி, பசுபிக் கடலின் மேல்பரப்பில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி அதிகரித்து வருகிறது. இதனால் இந்திய கடல் பகுதியில் வெப்பம் அதிகரிக்கிறது. இது பருவ மழையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கடுமையான வெள்ளம் ஏற்பட்டு நாட்டிற்குள், மாநிலங்கள் தங்களது எல்லைகளை இழக்கும் நிலையும் ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காற்றில் அதிகளவில் கார்பன் டை ஆக்சைடு கலப்பதை குறைக்க வேண்டும் என்று புவியியல் வல்லுநர்கள் ஏற்கனவே கருத்து தெரிவித்து இருந்தனர். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும். மலைப்பிரதேசங்களில் அதிகளவில் கட்டிடங்களை கட்டி மழை நீர் வடிவதற்கு தடையை ஏற்படுத்துகின்றனர். மலைகளில் மரங்களை வெட்டுவதால், மழைக்காலங்களில் மணல் அரிப்பு ஏற்பட்டு சேதாரம் அதிகளவில் ஏற்படுகிறது.

இவற்றை நாம் நிறுத்தினால் மட்டுமே இயற்கை நமக்கு துணை நிற்கும்.

அடுத்த செய்தி