ஆப்நகரம்

பிரிவினைவாதம், பயங்கரவாதத்தை ஏற்க முடியாது; காஷ்மீர் விவகாரத்தில் பொங்கி எழுந்த அமித் ஷா!

நாட்டை துண்டாட நினைப்பவர்கள் மற்றும் பயங்கரவாதத்தை திணிக்கும் முயற்சியை ஒருபோதும் ஏற்க முடியாது என்று ராஜ்ய சபாவில் அமித் ஷா பேசியுள்ளார்.

Samayam Tamil 2 Jul 2019, 9:58 am
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்தியில் ஆளும் பாஜக அரசு முனைப்பு காட்டி வருகிறது. ஆனால் ராஜ்ய சபாவில் பெரும்பான்மை இல்லாததால், மசோதாக்கள் நிறைவேறாமல் தள்ளிப் போய் வருகிறது.
Samayam Tamil Rajya Sabha


இதற்காக இன்னும் ஓராண்டு காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ராஜ்ய சபாவில் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வரும் குடியரசுத் தலைவர் ஆட்சி குறித்து விவாதிக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்தியாவில் ஒருங்கிணைந்த பகுதி. நம்மிடம் இருந்து அதை யாராலும் பிரிக்க முடியாது. பயங்கரவாதத்தை ஒருபோதும் பொறுக்க முடியாது.

காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சியே மோடி அரசு கொள்கை என்பதை நினைவில் கொள்ளுங்கள். பள்ளி மாணவ, மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு போதிய வசதிகள் செய்து தரப்படும். மூடப்பட்ட பள்ளிகள் திறக்கப்படும்.

உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். பிரிவினைவாத அமைப்புகளின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. முன்னாள் பிரதமர் நேரு மக்களை தவறாக வழி நடத்தவில்லை. இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு இதுதான்.

வரலாற்று தவறுகளில் இருந்து பாடம் கற்போம் என்றார். இதையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கும் மசோதா தாக்கல் செய்து வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

அடுத்த செய்தி