ஆப்நகரம்

ஆப்கானிஸ்தான்: திருமண விழாவில் குண்டுவெடிப்பு! 63 க்கும் மேற்பட்டோர் பலி!

ஆப்கானிஸ்தானில் திருமண விழாவில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 63க்கும் மேற்பட்டோர் உடல்சிதறி உயிரிழந்துள்ளனர்.

Samayam Tamil 18 Aug 2019, 8:22 pm
ஆப்கானிஸ்தான் காபூலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில், தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய திடீர் தாக்குதலில், 63க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 180க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
Samayam Tamil Afghanistan attack


ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் தலைநகரில், துபாய் சிட்டி திருமண மண்டபம் உள்ளது. இங்கு நேற்று இரவு ஒரு வீட்டு திருமண நிகழ்ச்சி மிகபிரம்மாண்டமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி, புன்னகை தழைத்தோங்க விருந்து உபசரிப்பும் இனிதாக நடைபெற்று வந்தது.

அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், தான் உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து, திடீர் தாக்குதல் நடத்தினான். இந்த தாக்குதலில் மண்டபத்தில் இருந்த 63க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும்,180க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அதிரடி படையினர், தீயணைப்பு மீட்டு படையினர், தாக்குதலில் படுகாயமடைந்தவர்களை மீட்டனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருவதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

திருமண விழாவில் புகுந்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது யார் என்பது குறித்த விபரங்கள் தெரியவில்லை. முன்னதாக தாலிபான்கள் பயங்கரவாத அமைப்பு தான் தாக்குதல் நடத்தியிருக்கக்கூடும் என்று கூறப்பட்டது. ஆனால், அந்த அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை.

ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரையில், கடந்த ஆண்டு மட்டும் சுமார் 3 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட மக்கள் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தனர். 900க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் பயங்கரவாத தாக்குதலுக்கு பலிகாடாகியுள்ளனர். ஏற்கனவே, அமெரிக்க அரசாங்கம் பயங்கரவாத அமைப்புகள், தாலிபான்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில், தான் தற்போது திருமண விழாவில் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

அடுத்த செய்தி