ஆப்நகரம்

கொரோனாவை ஒழித்துக்கட்டும் ரோபோக்கள்!

கொரோனாவை அழிக்கக்கூடிய ரோபோக்களை அமேசான், லைட்ஸ்ட்ரைக் ஆகிய நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன.

Samayam Tamil 5 Jul 2020, 5:43 pm
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக உலக நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு முயற்சித்து வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 1.1 கோடிக்கும் மேலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5,28,000க்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர்.
Samayam Tamil லைட்ஸ்ட்ரைக் ரோபோ


கடந்த ஏழு மாதங்களில் ஒரு சில நாடுகளை தவிர எல்லா நாடுகளையுமே கொரோனா புரட்டிப் போட்டுள்ளது. கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரையில் வைரஸை கொல்வதற்கு தேவையானவற்றை கண்டுபிடிப்பதற்காக பல நாடுகளும், நிறுவனங்களும் பணத்தைக் கொட்டி செலவு செய்கின்றன.

இதில் முக்கிய முன்னேற்றமாக, அமேசான் நிறுவனம் புதிய ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரோபோ புற ஊதாக் கதிர்களை பயன்படுத்தி கொரோனா வைரஸை அழித்துவிடும் என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ரோபோ அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டு தொழில் நிறுவனங்கள், விமான நிலையங்கள், மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த ரோபோ நகர்வதற்காக சிறிய சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், சுமார் 10 புற ஊதா லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த லைட்டுகள் மக்கள் அடிக்கடி தொடக்கூடிய இடங்களை குறிவைத்து சுத்தம் செய்கின்றன. எந்தவொரு மூலை முடுக்கும் தப்பிவிடாத வகையில் இந்த ரோபோக்கள் தூய்மைப்படுத்துகின்றன.

இதுவரை அமேசான் வெளியிட்டுள்ள ரோபோக்கள் ஒவ்வொரு நாளும் 8,000 மணி நேரத்துக்கு சுத்தம் செய்வதாக அமேசான் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதேபோல, அமெரிக்காவை சேர்ந்த லைட்ஸ்ட்ரைக் என்ற நிறுவனமும் ஒரு ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரோபோவும் புற ஊதாக் கதிர்களை பயன்படுத்துகின்றன. இந்த ரோபோக்கள் இரண்டே நிமிடங்களில் கொரோனாவை அழித்துவிடும் என்று லைட்ஸ்ட்ரைக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ரோபோ இன்னும் விற்பனைக்கு வரவில்லை. ஆனால், பல்வேறு நிறுவனங்களின் பயன்பாட்டுக்காக வாடகைக்கு கொடுக்கப்படுகிறது. கொரோனாவை அழிப்பதற்கு புற ஊதாக் கதிர்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும், மக்களின் கைகள், தோல், கண்களுக்கு புற ஊதாக் கதிர்கள் ஆபத்தானவை என்பதால் கவனமாக கையாள வேண்டுமென உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

அடுத்த செய்தி