ஆப்நகரம்

பிரதமர் மோடி குறித்த BBC ஆவணப்படம் - ரஷ்யா பரபரப்பு கருத்து!

பிரதமர் நரேந்திர மோடி குறித்து பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப்படம் குறித்து ரஷ்யா பரபரப்பு கருத்து தெரிவித்து உள்ளது.

Authored byVelayuthan Murali | Samayam Tamil 31 Jan 2023, 3:10 pm

ஹைலைட்ஸ்:

  • பிரதமர் மோடி குறித்த BBC ஆவணப்படம்
  • ரஷ்யா பரபரப்பு கருத்து!
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Maria Zakharova
மரியா சகரோவா
இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்து பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப்படம் குறித்து ரஷ்யா பரபரப்பு கருத்து தெரிவித்து உள்ளது.

குஜராத்தில் 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து மதக் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கலவரம் நடைபெற்ற போது குஜராத்தின் முதலமைச்சராக இருந்தவர் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி.
இதனிடையே, குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் எடுத்துள்ளது. "இந்தியா: மோடி கேள்விகள்" என்ற தலைப்பில் 2 பகுதிகளாக பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட அந்த ஆவணப்படத்தின் முதல் பகுதியில் குஜராத் வன்முறைக்கு நேரடி பொறுப்பு அப்போதைய முதலமைச்சரும், தற்போதைய பிரதமருமான நரேந்திர மோடி என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், பிபிசி ஆவணப்படத்தின் 2-ம் பகுதியில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து ரத்து, டெல்லி வன்முறை சம்பவம், குடியுரிமை திருத்தச்சட்டம் உட்பட மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை விமர்சனம் செய்துள்ளது.

இந்த ஆவணப்படம் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்திற்காக உருவாக்கப்பட்டதாகவும், காலனி ஆதிக்க மனப்பான்மையை காட்டுவதாகவும் பிபிசி ஆவணப்படம் குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்தது. மேலும், இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிடவும் மத்திய அரசு கடந்த 21-ம் தேதி தடை விதித்தது. இங்கிலாந்து உள்பட பல்வேறு வெளிநாடுகளில் பிபிசி இந்த ஆவணப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் இந்தியாவில் தடையை மீறி பல அமைப்புகள் இந்த ஆவணப்படத்தை சட்ட விரோதமாக வெளியிட்டு வருகின்றன.
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை! - 'கட்டாய மத மாற்றம்.. 10 ஆண்டுகள் சிறை'
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குறித்து பிபிசி எடுத்துள்ள ஆவணப்படம் குறித்து ரஷ்யா கருத்து தெரிவித்து உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மரியா சகரொவா, "சுதந்திரமான கொள்கைகளை கொண்டுள்ள ரஷ்யா மட்டுமின்றி சக்தி வாய்ந்த பிற உலக நாடுகளுக்கு எதிராக பிபிசி தகவல் போர் நடத்துகிறது என்பதற்கான மற்றொரு ஆதாரம் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். சில ஆண்டுகளுக்கு பின், இங்கிலாந்து அரசாங்கத்துடனும் பிபிசி சண்டையிட்டது என்பது தெரிய வந்தது. சில குழுக்களுக்கு ஆதரவாக மற்றொரு தரப்புக்கு எதிரான கருவியாக பிபிசி செயல்பட்டது. பிபிசிக்கு அதற்கேற்ப பதிலடி கொடுக்க வேண்டும்," என கூறினார்.
எழுத்தாளர் பற்றி
Velayuthan Murali
நான் மு.வேலாயுதன். MBA பட்டதாரி. பத்திரிகை துறை மீது ஆர்வம் கொண்ட நான், 17வது வயதில், அச்சு ஊடகத்தில் காலடி எடுத்து வைத்தேன். சுமார் 5 ஆண்டுகள் கடந்த பயணம், என்னை, காட்சி ஊடகத்திற்கு அழைத்துச் சென்றது. அங்கு 2 ஆண்டுகள் தொடர்ந்த பயணம், என்னை, டிஜிட்டல் ஊடகத்திற்கு அழைத்து வந்தது. தமிழ்நாடு, இந்தியா, உலகம் தொடர்பான நடப்பு செய்திகளை எழுதி வருகிறேன். பத்திரிகையாளராக சாமானிய மக்களின் குரலாக ஒலிப்பதில் சமரசம் இன்றி பணியாற்றி வருகிறேன். Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer ஆக தற்போது பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி