ஆப்நகரம்

கோழிக்கறியில் கொரோனா... புலம்பும் சீனா!

சீனாவில் கோழிக்கறியில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Samayam Tamil 13 Aug 2020, 6:45 pm

சீனாவில் தொழில் வளம் மிகுந்த நகரங்களில் ஒன்றான ஷென்ஷெனில் இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சியில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்த இறைச்சி பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவும் ஷென்ஷென் அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil கோழிக்கறி


கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் மாகாணத்தில் முதன்முதலாக கொரோனா பரவத் தொடங்கியது. அதன்பின் படிப்படியாக கொரோனா உலகம் முழுவதும் பரவியுள்ளது. தீவிர முயற்சியால் சீனாவில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதற்கிடையே மீன், கடல் உணவு என இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. சில வாரங்களுக்கு முன் சீன தலைநகர் பெய்ஜிங்கில் திடீரென கடல் உணவு சந்தையில் கொரோனா பரவத் தொடங்கியது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் மீன்களுக்கு தடை விதித்தனர்.

மீன்களில் கொரோனா... கதறும் சீனா!

மேலும், நேற்று முன் தினம் சீனாவின் தலியன் துறைமுகம் வாயிலாக இறக்குமதி செய்யப்பட்டு யண்டாய் நகருக்கு கொண்டுசெல்லப்பட்ட கடல் உணவு பேக்கேஜிங்கில் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உறையவைக்கப்பட்ட கோழி இறைச்சியின் இறக்கை பகுதியில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஷென்ஷென் அரசு தெரிவித்துள்ளது. இந்த இறைச்சி பிரேசிலின் அரோரா அலிமெண்டோஸ் ஆலையில் இருந்து வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன் சீனாவில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது பேக்கேஜிங்கில் மட்டுமே. ஆனால் தற்போது இறைச்சியிலேயே நேரடியாக கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி