ஆப்நகரம்

உயிரைப் பறிக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவில் புதிய கட்டுப்பாடு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாகச் சீனா அவதிப்பட்டு வரும் சூழலில், அந்த வைரஸ் இந்தியாவில் பரவாமலிருக்க மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

Samayam Tamil 22 Jan 2020, 10:13 pm
மத்திய சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் வுஹான் நகரில் புதிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. இந்த வைரஸ் காய்ச்சலுக்கு உள்ளான 11 பேர் வரை உயிரிழந்துள்ளனர். சுமார் 400 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.
Samayam Tamil WUHAN-CHINA-VIRUS


இந்த வைரஸ் அண்டை நாடுகளுக்கும் பரவுவதற்கு முன் அதன் மூலத்தைக் கண்டறிய வேண்டும் எனச் சீனா அரசுக்கு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியது.

அமெரிக்காவின் வாஷிடங்கனைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. முப்பதுகளில் இருக்கும் அவரது உடல்நிலை தற்போது நலமாகவே இருக்கிறது எனவும் அவர் மூலம் மற்றவர்களுக்குப் பரவும் அபாயம் இல்லை எனவும் அந்நாட்டு அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

இதனால், அனைத்து நாடுகளும் வைரஸ் பரவாமலிருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

வாஷிங்டனில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று

அதன்படி நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் தெர்மல் ஸ்கிரீனிங் மேற்கொள்ளப்பட்டு பயணிகளை அனுமதிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது பயணிகள் அனைவரும் வெப்ப சார் உடல் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுவார்கள்.

சீனா, ஹாங்காங்கிலிருந்து வரும் பயணிகள் பெரும்பாலும் டெல்லி, மும்பை, கொல்கத்தா விமான நிலையங்களையே வந்தடைகிறார்கள். இதனால், குறித்த விமான நிலையங்களில் தெர்மல் ஸ்கிரீனிங் நடத்தப்பட்டு வந்தது.

சீனாவில் மனிதர்களுக்குப் பரவும் கொரோனா வைரஸ்: 4 பேர் பலி

இந்நிலையில், இப்போது பாதுகாப்பு காரணங்களால் சென்னை, பெங்களூரு, ஐதராபாத், கொச்சி ஆகிய விமான நிலையங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதே போல் சீனா செல்லும் இந்தியப் பயணிகள் தேவைப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாகச் சீனாவில் உள்ள மிருக பண்ணைகள், மிருகக் கறி வெட்டப்படும் சந்தைகளுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி