ஆப்நகரம்

கொரோனா: இத்தாலியில் ஒரே நாளில் 793 பேர் பலி!

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் மோசமான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

Samayam Tamil 22 Mar 2020, 8:02 am
உலகம் முழுவதும் இதுவரை 13 ஆயிரத்து 050 பேர் உயிரிழந்துள்ளனர். 3 லட்சத்து 8 ஆயிரத்து 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil இத்தாலியில் ஒரே நாளில் 793 பேர் பலி


சீனாவின் வுஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இரு மாதங்கள் அங்கு கோர தாண்டவம் ஆடிய நிலையில் தற்போது உலகில் சுமார் 190 நாடுகளில் அசாதாரண சூழலை உருவாக்கியுள்ளது. சில வாரங்களாக சீனாவில் கொரோனாவால் உயிரிழப்போரின் விகிதம் குறைந்துள்ளது. ஆனால் முழுவதுமாக நின்றுவிடவில்லை.

ஆனால் இத்தாலியில் நிலைமை ஆபத்தான கட்டத்தில் உள்ளது. சீனாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3261 ஆக உள்ளது. அதுவே இத்தாலியில் 4 ஆயிரத்து 825ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 793 பேர் அந்த நாட்டில் உயிரிழந்துள்ளனர்.

மக்கள் ஊரடங்கால் கொரோனா அதிகரிக்குமா, குறையுமா?

இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் இன்று மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் வைரஸ் பரவுவது அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 14 லட்சத்து 90 ஆயிரத்து 303 பேர் உடல் வெப்ப சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். நேற்று இரவு 10.45 நிலவரப்படி இந்தியாவில் 315 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

அலட்சியம் ஆபத்தின் ஆரம்பம்; மக்கள் ஊரடங்கி விட்டால் போதுமா?

தமிழ்நாட்டில் கொரோனாவால் ஏற்கெனவே மூன்று பேர் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை மேலும் மூன்று பேர் பாதிகப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அதில் இருவர் தாய்லாந்து நாட்டினர் எனவும், ஒருவர் நியூசிலாந்து நாட்டில் இருந்து வந்தவர் எனவும் தெரிவித்துள்ள அமைச்சர், அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி