ஆப்நகரம்

இரத்தம் உறைந்து மரடைப்பு ஏற்படும்: கொரோனா புதிய தகவலால் பீதி!

கொரோனா வைரஸ் தொற்றானது இதயத்தை தாக்கும் ஆபத்து உள்ளதாக அமெரிக்க நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

Samayam Tamil 2 Nov 2020, 3:16 pm
உலகின் பல்வேறு நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு கோவிட்-19 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தொற்றானது கொரோனா வைரஸால் ஏற்படுகிறது. இதற்கு Severe acute respiratory syndrome (SARS) கொரோனா வைரஸ் 2 அல்லது Sars-CoV-2 என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இதற்கான தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், அதனை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக மருத்துவ வல்லுநர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Samayam Tamil coronavirus may affect heart us medical experts warns
இரத்தம் உறைந்து மரடைப்பு ஏற்படும்: கொரோனா புதிய தகவலால் பீதி!



கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் கோவிட்-19 தொற்றானது மூக்கு மற்றும் தொண்டை உள்ளிட்ட மேல் சுவாசக்குழாயில் இருக்கும் போது மட்டுமே அது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதுவே, கீழ் சுவாசக்குழாயை தாக்கும் போது சிக்கல்கள் ஏற்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்டவைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பன உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொடர்பான புதிய தகவல்கள் நாள்தோறும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

6 வகையான தனித்துவ இனங்கள்

அந்த வகையில், கொரோனா வைரஸ்களில் 6 வகையான தனித்துவமான இனங்கள் இருப்பதாக லண்டன் கிங்ஸ் கல்லூரி ஆய்வாளர்கள் ஏற்கனவே கண்டறிந்துள்ளனர். அதன்படி, தொடர்ச்சியான இருமல், காய்ச்சல் மற்றும் வாசனை இழப்பு ஆகியவை பொதுவாக நோயின் மூன்று முக்கிய அறிகுறிகளாக இருந்தாலும் தலைவலி, தசை வலி, சோர்வு, வயிற்றுப்போக்கு, குழப்பம், பசியின்மை, மூச்சுத் திணறல் மற்றும் சில புதிய அறிகுறிகளையும் கொரோனா நோயாளிகளிடம் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், கொராணோ வைரஸ் தொற்று அதிக வீரியம் கொண்ட ‘கிளேட் A13I’ வைரஸாக உருமாறி பரவி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இரத்தம் உறைந்து மாரடைப்பு ஏற்படும்

இந்த நிலையில், கொரோனா வைரஸ் சுவாசம் தொடர்பான தொற்றாக உள்ளபோதிலும், இதய தசைகளை தாக்கி, இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என சமீபத்திய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவ நிபுணர் சீன் பின்னி இது குறித்து கூறுகையில், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இதயம், வைரஸால் சேதம் அடையும் ஆபத்து உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த வைரஸ் ரத்த நாளங்களில் படையெடுத்து அவற்றுக்குள் வீக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும், அதன் மூலம் இரத்தம் உறைந்து மாரடைப்பு ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்னும் பல தொற்றுகள் உள்ளன

கொரோனா வைரஸ் போன்று 8.5 லட்சத்துக்கு அதிகமான வைரஸ் கிருமிகள் விலங்குகளிடம் உள்ளன. அதன்மூலம் மனிதர்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும், எதிர்காலத்தில் இன்னும் பல நோய்த் தொற்றுகளை எதிர்கொள்ள விருக்கிறோம் என்றும் ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி