ஆப்நகரம்

75 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு- பதற வைக்கும் உயிர் பலி- மீளாத் துயரத்தில் சீனா!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Samayam Tamil 22 Feb 2020, 3:12 pm
சீனாவின் ஹூபே மாகாணத்தின் வுஹான் நகரில் கொடிய வைரஸ் ஒன்று இறைச்சி மூலம் மனிதர்களுக்கு பரவியதாக சொல்லப்படுகிறது. இது கொரோனா என்று அழைக்கப்பட்ட நிலையில் பின்னர் கோவிட் 19 என்றும் பெயரிட்டனர். இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக மனிதர்கள் உயிரிழக்கத் தொடங்கியதை அடுத்து அச்சம் தொற்றிக் கொண்டது. பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து பிறருக்கு எளிதில் பரவியதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.
Samayam Tamil Corona


உடனே ஹூபே மாகாணம் முழுவதுமாக மூடப்பட்டது. அதற்குள் சீன புத்தாண்டு விடுமுறையை ஒட்டி ஏராளமானோர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்திருந்தனர். இதனால் பிற நாடுகளுக்கும் பரவும் என்ற அச்சம் ஏற்பட்டது.

தற்போது வரை 25க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சீனாவிற்கு வெளியேயும் உயிர் பலி ஏற்படும் நிலை ஏற்பட்டது.

இந்தியாவில் மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த சூழலில் மருத்துவமனைகளில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர். ஒருகட்டத்தில் வைரஸ் பாதிப்பு குணமடைந்ததால் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனால் இந்தியாவிற்கு கொரோனா குறித்த பயம் முழுவதுமாக அகன்றது. ஆனால் சீனாவில் வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 345ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவை வென்ற 5 வயது சிறுமி ஆடி, பாடி செல்லும் காட்சி... வைரலாகும் வீடியோ!

அதேசமயம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்து 567ஆக உயர்ந்தது. இது உலக சுகாதார நிறுவனத்தையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. சீனாவிற்கு உதவ பல்வேறு நாடுகளும் முன்வந்துள்ளன.

இதற்கிடையில் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியிருப்பதாக சீன அரசு தெரிவித்திருப்பது மட்டுமே தற்போதைக்கு இருக்கும் ஒரே ஆறுதல்.

சீனாவை தொடர்ந்து தென்கொரியாவில் நேற்று முன் தினம் ஒரே நாளில் 100 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது வரை அந்நாட்டில் 204 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவிற்கு வெளியே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக தென்கொரியா மாறியுள்ளது.

அடுத்த செய்தி