ஆப்நகரம்

இந்தியரின் ரூ.1.5 கோடி பில்லை தள்ளுபடி செய்த துபாய் மருத்துவமனை!

இந்திய ஊழியர் ஒருவரின் 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள மருத்துவ பில்லை துபாயை சேர்ந்த மருத்துவமனை தள்ளுபடி செய்துள்ளது.

Samayam Tamil 16 Jul 2020, 10:10 pm
ஹைதராபாத்தை சேர்ந்த ராஜேஷ் லிங்கைய்யா ஒட்னாலா (42 வயது) என்பவர் துபாயில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு துபாய் மருத்துவமனையில் ஏப்ரல் 23ஆம் தேதியன்று அனுமதிக்கப்பட்டார்.
Samayam Tamil ராஜேஷ் லிங்கைய்யா


அவருக்கு கடந்த 80 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த மருத்துவமனை பில் 762,555 திர்ஹாம்ஸை தொட்டது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.1.56 கோடிக்கும் மேல் (ரூ.1,56,51,798.89).

ராஜேஷ் லிங்கைய்யா குணமடைந்த பின்னர் இந்தியாவுக்கு திரும்பி வர வேட்னுமென விரும்பினார். ஆனால் அவரால் ரூ.1.5 கோடிக்கு மேலான மருத்துவ பில்லை கட்ட முடியவில்லை. இதைத்தொடர்ந்து, மனிதாபிமான அடிப்படையில் மருத்துவமனை பில்லை தள்ளுபடி செய்ய வேண்டுமென துபாய் மருத்துவமனைக்கு இந்திய தூதரகம் கடிதம் எழுதியது.
அக்கடிதத்தில், “அண்மையில் வெளியான மருத்துவ அறிக்கையின்படி ராஜேஷ் குணமடைந்துள்ளதாகவும், அவரை டிஸ்சார்ஜ் செய்யலாம் எனவும் தெரிகிறது. அவரது குடும்பம் விரைவாக இந்தியா திரும்ப வேண்டுமென விரும்புகிறது. ஆனால் அவர்களது பொருளாதார சூழலால் மருத்துவமனைக் கட்டணத்தை செலுத்த முடியவில்லை” என்று தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, துபாய் மருத்துவமனை எந்தவொரு கட்டணமும் வசூலிக்காமல் ராஜேஷை டிஸ்சார்ஜ் செய்துள்ளது. இதுபற்றி இந்திய தூதரக பிரதிநிதி நீரஜ் அகர்வால் பேசுகையில், “மனிதாபிமான அடிப்படையில் அவ்வளவு பெரிய தொகையை தள்ளுபடி செய்ததற்காக துபாய் சுகாதார ஆணையத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்” என்று கூறினார்.

ராஜேஷ் லிங்கைய்யாவும் அவரது குடும்பத்தினரும் இந்தியா செல்வதற்காக இந்திய தூதரகம் சார்பில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் இலவச டிக்கெட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ராஜேஷ் குடும்பம் ஜூலை 14ஆம் தேதியன்று தாயகம் திரும்பியது.

அடுத்த செய்தி