ஆப்நகரம்

பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு: 8 மாணவர்கள் பலி!

பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 8 மாணவர்கள் பலியாகினர்.

Samayam Tamil 20 Sep 2021, 4:30 pm

ஹைலைட்ஸ்:

  • ரஷ்யாவில் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு
  • 8 மாணவர்கள் பலி
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Russia
ரஷ்யாவில் உள்ள பெர்ம் பல்கலைக்கழகத்தில், மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், 8 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

பெர்ம் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் வழக்கம் போல் இன்று காலை வகுப்புகள் நடைபெற்று வந்தன. அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர், வித்தியாசமான உடையுடன், தலையில் கவசத்துடன், கையில் துப்பாக்கியை ஏந்தியவாறு பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்தார். மேலும் அங்கிருந்த மாணவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில், 8 மாணவர்கள் பலியாகினர். மேலும், 6 மாணவர்கள் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்த மாணவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பல்கலைக்கழகத்தில், மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்திய காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன. மேலும், மர்ம நபருக்கு பயந்து ஜன்னல்கள் வழியாக மாணவர்கள் கீழே குதிக்கும் காட்சி சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அக்., 1 முதல் மாஸ்க் அணிய வேண்டாம்: பிரதமர் அறிவிப்பு!
பெர்ம் பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் ஒருவர் 8 பேரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் காயங்களுடன் பிடிபட்டார். இதன் காரணமாக ரஷ்யாவில் துப்பாக்கி விற்பனை, துப்பாக்கி வைத்திருக்க உரிமம் வழங்குதல் ஆகியவற்றில் புதிய கொள்கைகளை வகுக்க அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டு உள்ளார்.

இதற்கிடையே, இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ரஷ்ய பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது. பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் நலம் பெற வாழ்த்துகிறோம். அங்கு பயிலும் இந்திய மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். உள்ளூர் அதிகாரிகள் மற்றும் இந்திய மாணவர்களின் பிரதிநிதிகளுடன் தொடர்பில் இருக்கிறோம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அடுத்த செய்தி