ஆப்நகரம்

வடகொரிய எல்லையில் கால் பதித்த முதல் அமெரிக்க அதிபர்; டிரம்ப்- கிம் சந்திப்பின் பின்னணி!

உலகின் எதிரியாக கருதப்பட்ட வட கொரிய நாட்டின் எல்லைக்குச் சென்று, அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிய வரலாறு படைத்துள்ளார்.

Samayam Tamil 30 Jun 2019, 5:10 pm
இளம் தலைவரை அதிபராக கொண்டு செயல்பட்டு வரும் நாடு வடகொரியா. இவரை சர்வாதிகாரி, கொடுங்கோலன் என்றெல்லாம் அழைத்து வருகின்றனர். அதற்கேற்றாற் போல் தான் நடவடிக்கைகளும் அமைந்துள்ளன.
Samayam Tamil Trump Kim Meet


ஏவுகணை சோதனை என்ற பெயரில், கொரிய தீபகற்பம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகையும் அச்சத்தில் ஆழ்த்தியது. மூன்றாம் உலகப் போர் மூண்டு விடுமோ என்று அனைவரும், வடகொரியாவை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

ஐ.நா, அமெரிக்கா என யாருடைய கட்டளைக்கும் கீழ்ப்படியவில்லை. இதற்கு பல்வேறு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன. முக்கியமாக வடகொரியா, அமெரிக்கா இடையே வார்த்தை மோதல் நிகழ்ந்தது.

இந்த சூழலில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. தென்கொரியா - வடகொரியா இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதையடுத்து அமெரிக்காவும், வடகொரியா உடன் அமைதி வழியில் செல்ல முடிவெடுத்தது.

சிங்கப்பூரில் முதல் முறையாக கிம் ஜாங் உன், டொனால்ட் டிரம்ப் சந்தித்து பேசினர். அப்போது தனது ஏவுகணை சோதனைகளை நிறுத்திக் கொள்வதாக வடகொரியா உறுதி அளித்தது. இதையடுத்து வியட்நாமில் கிம் - டிரம்ப் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனால் மீண்டும் அமெரிக்கா - வடகொரியா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. சமீபத்தில் ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் ஜி-20 உச்சி மாநாடு தொடங்கியது. இதில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.

அங்கிருந்து தென்கொரியாவிற்கு அதிபர் டிரம்ப் புறப்பட்டு சென்றார். இந்நிலையில் வடகொரிய எல்லைப் பகுதிக்கு சென்று கிம் ஜாங் உன்னை, டிரம்ப் சந்தித்துள்ளார். அப்போது அமெரிக்காவிற்கு வருமாறு கிம்மிற்கு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

இது வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது. இதன்மூலம் இருதரப்பு உறவில் மீண்டும் இணக்கம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி