ஆப்நகரம்

லண்டன் மாடல்: துபாயில் சுற்றுலாப் பயணிகளை கவர புதிய திட்டம்!

லண்டன் நகரில் ஓடும் சிறப்பு மிக்க டாக்ஸிகள் துபாயில் சோதனை அடிப்படையில் விரைவில் இயக்கப்படவுள்ளது

Samayam Tamil 17 Jan 2021, 3:56 pm
ஐக்கிய அரபு நாடான துபாய் சுற்றுலாவுக்கு பெயர் போனது. அங்கு சுற்றுலாப் பயணிகளை கவர பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், லண்டன் நகரில் ஓடும் புகழ்பெற்ற கறுப்பு நிற டாக்ஸிகளை போன்று மின்சாரம் மற்றும் எரிசக்தியை பயன்படுத்தி இயக்கப்படும் வகையில் புதிய டாக்ஸியானது சோதனை அடிப்படையில் பிப்ரவரி மாதம் துபாயில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
Samayam Tamil புதிய டாக்ஸி
புதிய டாக்ஸி


துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் சார்பில் இயக்கப்படவிருக்கும் இந்த டாக்ஸிகள் பற்றி ஆணையத்தின் பொது இயக்குனர் மத்தார் அல் தயார் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் அந்த டாக்ஸிகளில் இருக்கும் வசதிகள், செயல்பாடு குறித்து அதிகாரிகள் விவரித்தனர்.

தொடர்ந்து அவர் கூறுகையில், “இந்த புதிய சேவையானது துபாய் நகருக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்கட்டமாக சோதனை அடிப்படையில் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்த டாக்ஸிகள் இயக்கப்படும். துபாய் நகரில் டாக்சி சேவையை மேலும் மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் இருக்கும். அக்டோபர் மாதம் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி தொடங்க இருப்பதால் இந்த சேவை மேலும் முக்கியத்துவம் பெறும்” என்றார்.


இந்த டாக்ஸியில் இருக்கும் பேட்டரி ஒரு முறை சார்ஜ் செய்தால் 3 மணி நேரம் தொடர்ந்து இயங்கும் திறன் கொண்டது. 30 நிமிடத்தில் சார்ஜ் செய்து கொள்ளலாம். சாட்டிலைட் இணைப்பை கொண்டிருப்பதால் எந்த பகுதிக்கு டாக்ஸி செல்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பலர் உயிரிழப்பு - பொதுமக்கள் பேரதிர்ச்சி!

மேலும், 6 பேர் தனித்தனி கேபின்களில் அமர்ந்து பயணம் செய்யும் வகையில் இந்த டாக்ஸியின் அமைப்பு உள்ளது. மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறி, இறங்கும் வகையில் வசதிகளையும் கொண்டுள்ளது. விபத்து ஏற்பட்டால் அவசர சேவை மையத்துக்கு தகவல் தெரிவிக்கும் வசதி, வைபை வசதி என்பன உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் இந்த டாக்ஸியில் உள்ளன.

அடுத்த செய்தி