ஆப்நகரம்

நட்சத்திரங்கள் உருவாகும் பகுதி: ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி புகைப்படம்!

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட நட்சத்திரங்கள் உருவாகும் பகுதியின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது

Authored bySM Prabu | Samayam Tamil 15 Jan 2023, 8:21 am
அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி நிறுவனமான நாசா, ஐரோப்பா மற்றும் கனடாவின் விண்வெளி ஆய்வு அமைப்புகளுடன் இணைந்து ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கியது. சுமார் ரூ.75,000 கோடிக்கும் அதிகமான மிகப்பெரிய பட்ஜெட்டுடன் உருவாக்கப்பட்ட இந்த தொலைநோக்கி பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏரியன் 5 ராக்கெட் மூலம் கடந்த 2021ஆம் ஆண்டு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு, பூமியிலிருந்து 10 லட்சம் மைல்கள் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டது.
Samayam Tamil ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி புகைப்படம்
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி புகைப்படம்


பிரபஞ்சத்தின் முதல் நட்சத்திரத்தை கண்டுபிடிக்கும் சக்திகொண்ட இந்த தொலைநோக்கி, நாம் அறிந்திராத பல அரிய தகவல்களை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட பேரண்டங்களின் திரள்கள் அடங்கிய புகைப்படங்களை கடந்த ஆண்டு நாசா வெளியிட்டது.

இந்த நிலையில், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட நட்சத்திரங்கள் உருவாகும் பகுதியின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. விண்வெளியில் நட்சதிரங்கள் உருவாகும் பகுதி நெபுலா என்று அழைக்கப்படுகிறது. தற்போது எடுக்கப்பட்டுள்ள என்.ஜி.சி. 346 எனப்படும் இந்த பகுதியானது பூமியில் இருந்து சுமார் 2 லட்சம் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதாகவும், இது குறைந்த உலோக செறிவுகளுடன் பால்வீதிக்கு அருகில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தில் நட்சத்திரங்கள் உருவாகும் பகுதியானது ரிப்பன்களின் திரள்களைப் போல் காட்சியளிக்கிறது. நட்சத்திரங்கள் உருவாகும் போது மிகப்பெரிய அளவிலான தூசுப்படலங்களையும், வாயுக்களையும் அதனுடன் சேர்த்துக் கொள்வதால் இத்தகைய ரிப்பன் திரள் போன்ற தோற்றம் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த புகைப்படத்தை ஆய்வு செய்வதன் மூலம், சூரியன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் எவ்வாறு தோன்றியது என்பது குறித்த தகவல்களையும் தெரிந்து கொள்ள வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
எழுத்தாளர் பற்றி
SM Prabu
நான் மணிகண்ட பிரபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை, எழுத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாக கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் பயணித்து வருகிறேன். அரசியல், நீதிமன்றம், அரசு சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். செய்திகளை தாண்டி அதன் பின்புலங்களை ஆராய்ந்து கட்டுரைகளாக தந்து வருகிறேன். பத்திரிகையாளராக சாமானிய மக்களின் குரலாக ஒலிப்பதில் எவ்வித சமரசமும் இன்றி பணியாற்றி வருகிறேன். Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக தற்போது பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி