ஆப்நகரம்

கொரோனாவே இன்னும் முடியல...அதற்குள் இன்னொரு தலைவலி!

காங்கோ நாட்டில் திடீரென எபோலா வைரஸ் தொற்று பரவி நான்கு பேர் பலியாகியுள்ளனர்.

Samayam Tamil 2 Jun 2020, 8:48 pm
காங்கோ நாட்டின் ஈக்வேட்டீர் மாகாணத்தில் வங்கத்தா பகுதியில் புதிதாக எபோலா வைரஸ் பரவியுள்ளதாக அந்நாட்டு அரசு இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. வங்கத்தா பகுதியில் இதுவரை ஆறு பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக காங்கோ சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்களில் நான்கு பேர் இறந்துவிட்டதாகவும், இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil எபோலா வைரஸ்


இவர்கள் ஆறு பேரில் மூன்று பேருக்கு பரிசோதனைக் கூடத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டு எபோலா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார மையத்தின் ஆப்ரிக்க மண்டல இயக்குநர் மத்ஷதிசோ மோய்தி பேசுகையில், “கொரோனா மட்டுமே மக்களுக்கான அச்சுறுத்தல் இல்லை என நினைவூட்டும் வகையில் எபோலா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா மீது அதீத கவனம் இருந்தாலும் மற்ற சுகாதார அச்சுறுத்தல்களை உலக சுகாதார மையம் கவனமாக கண்காணித்து வருகிறது.

சவாலான சூழலில் இந்த பிரச்சினையை எதிர்கொள்கிறோம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக சுகாதார அதிகாரிகளுடன் உலக சுகாதார மையம் இணைந்து பணியாற்றியுள்ளது. அரசுக்கு உதவியாக உலக சுகாதார மையம் சார்பில் சிறப்புக் குழுவை அனுப்ப திட்டமிட்டிருக்கிறோம். தொற்று ஏற்பட்டுள்ள பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாக இருப்பதால் நாம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே எபோலா தொற்று ஏற்பட்ட பகுதியில் உலக சுகாதார மையத்தின் பிரதிநிதிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புகொண்டவர்களை தேடும் பணியும் தீவிரமடைந்துள்ளது. காங்கோவில் பல இடங்களில் கொரோனா தொற்று ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. எபோலா வைரஸ் முதல்முறையாக 1976ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. அதன்பிறகு காங்கோவில் தற்போது 11ஆவது முறையாக பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி