ஆப்நகரம்

kailaasa: சொன்னது போல நாணயம் வெளியிட்ட நித்தி... ஆனால் சின்ன குழப்பம்

நாணயங்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இல்லை. இந்தியாவின் மன்னாராட்சிக் காலங்களில் பயன்படுத்தப்பட்ட பழங்கால நாணயங்களின் வடிவில் தங்க நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Samayam Tamil 22 Aug 2020, 12:29 pm
நாடு விநாயகர் சதுர்த்தியை அமைதியான முறையில் கொண்டாடி வருகிறது. 1.5 லட்சம் சிலைகளை வைப்போம் என்று அறிவித்த இந்து முன்னணியும் சத்தம் இன்றி தனியார் இடங்களில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடி வருகிறது. அரசு சொன்னபடி மக்களும், கோயில்களுக்குள் கூட்டம் போடாமலும், வீடுகளுக்குள் இருந்தபடியும் வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி அன்று தன் நாட்டு நாணயத்தை வெளியிடுவதாக வீடியோ வழியே அறிவித்த நித்யானந்தா, தனக்குத் தானே சொன்னபடி கைலாசா நாட்டு நாணயத்தை வெளியிட்டுக் கொண்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil nithayandha released kailasian dollar for his new country called kailaasa
kailaasa: சொன்னது போல நாணயம் வெளியிட்ட நித்தி... ஆனால் சின்ன குழப்பம்


முன்னதாக, தனது நாட்டு ரிசர்வ் வங்கி குறித்த அறிவிப்பை வெளியிட்ட நித்யானந்தா அடுத்த வீடியோவில் பணக்கொள்கை மற்றும் மற்ற நாடுகளுடனான வர்த்தக உறவு குறித்து அறிவித்தார். அப்போது, விநாயகர் சதுர்த்தி அன்று தன் நாட்டு நாணயத்தை வெளியிடுவேன் என்று அறிவித்தார். அதன்படி, இன்று நாணயத்தை வெளியிட்டதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.


பணக்கொள்கையில் அறிவித்தது போலவே தங்கத்தாலான கைலாசியன் டாலர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு காலசியன் டாலர் சுமார் 11.66 கிராம் தங்கத்தால் ஆனது. 11.66380 கிராம் தங்கம் ஒரு தொலா என்று அழைக்கப்படுகிறது. எஸ்.ஐ. அலகுமுறையின்படி எப்படி மி.கிராம், கிராம், கிலோ கிராம் ஆகிய அளவைகள் உள்ளதோ அதேபோல இந்து முறைமைப்படியான அளவை முறைகளில் தொலா என்பது இருந்தது. கைலாசியன் டாலர் ஒரு தொலா நாணயமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கல்விக்கொள்கை, பணக்கொள்கை, ரிசர்வ் வங்கி என அனைத்து அறிவுப்புகளையும் வெளியிட்ட நித்யானந்தா, கைலாசா என்னும் நாடு எங்கிருக்கிறது என்று மட்டும் இதுவரை அறிவிக்கவில்லை.
சமயம் தமிழ்


அதேபோல அரை டாலர், கால் டாலர் ஆகிய நாணயங்களும் தங்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் கூடுதல் செய்தியும் குறிப்பாக கவனிக்க வேண்டிய செய்தியும் என்னவென்றால் நாணயங்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இல்லை. இந்தியாவின் மன்னராட்சிக் காலங்களில் பயன்படுத்தப்பட்ட பழங்கால நாணயங்களின் வடிவில் தங்க நாணயங்களாக வெளியிடப்பட்டுள்ளன.

இது ஏன் என்றால், முன்னால் இருந்த நாணயங்களை புதுப்பித்து (Revive) மீட்டெடுப்பு செய்துள்ளதாக விளக்கம் வேறு கொடுக்கிறார் நித்தி. இதே போல 2டாலர், 3 டாலர், 4 டாலர் 5 டாலர், 10 டாலர் ஆகிய நாணயங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

அப்படியென்றால் கைலாசாவுக்கு என்று இந்த நாணயங்களில் இருக்கும் தனித்துவமான அறிகுறிகள் என்ன? குறைந்தபட்சம் எழுத்தாகவாவது பொறிக்கப்பட்டுள்ளதா என்றால் அதுவும் இல்லை. வீடியோவில் காட்டப்பட்ட நாணயத்திலும் இல்லை. இதுகுறித்து நித்தியும் விளக்கவில்லை. இந்நிலையில், அந்த நாணயங்கள் அலங்காரப் பொருட்களாக இருக்கலாமே ஒழிய சர்வதேச உறவுக்கு வரவே முடியாது என்பது தெளிபு.

சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாக இருக்க வேண்டிய ஒரு விடயம், பல இடங்களில் காமெடி செய்தியாகவே கடந்து செல்லப்படுகிறது. காரணம், கல்விக்கொள்கை, பணக்கொள்கை, ரிசர்வ் வங்கி என அனைத்து அறிவுப்புகளையும் வெளியிட்ட நித்யானந்தா தன் நாடு கைலாசா எங்கிருக்கிறது என்று மட்டும் அறிவிக்கவில்லை.
தேடப்படும் சர்வதேச குற்றவாளியான நித்யானந்தா தன்னைத் தேடும் காவல்துறையை மடைமாற்றுவதற்காகவே இந்த வேலைகளைச் செய்து வருகிறார் என்றும் மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், இந்து மக்கள் கட்சி மட்டும் நித்யானந்தா என்பவரை இந்து நாடு அமைத்த வீரன் என்று வெளிப்படையாகக் கொண்டாடி வருகிறது.

அடுத்த செய்தி