ஆப்நகரம்

இந்தியாவுக்கு ஆதரவுன்னு நாங்க எப்போ சொன்னோம்? அமெரிக்கா பல்டி!

சீனாவுடன் பதற்றம் அதிகரித்தால் இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என எந்த உத்தரவாதமும் இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Samayam Tamil 11 Jul 2020, 5:32 pm
இந்தியா, சீனா இடையேயான பதற்றம் அதிகரித்தால் இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆதரவளிப்பார் என எந்த உத்தரவாதமும் இல்லை என்று அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil ட்ரம்ப் - மோடி


ஜூன் 15ஆம் தேதியன்று கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது. பிரச்சினையை தீர்க்க இருதரப்பு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும், இந்தியாவும் சீனாவும் மோதிக்கொள்வதை விட நண்பர்களாக இருப்பதே சிறந்தது என சீன தூதர் சன் வீடோங் நேற்று தெரிவித்தார்.

இந்நிலையில், இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என எந்த உத்தரவாதமும் இல்லை என்று அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “சீனா தனது அண்டை நாடுகளுடன் முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறது.

முக்கியமாக, இந்தியா, கிழக்கு மற்றும் தென் சீனக் கடல், ஜப்பான் ஆகிய பகுதிகளில் சீனாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். சீனாவுக்கு எதிராக இந்தியாவுக்கு அதிபர் ட்ரம்ப் ஆதரவளிப்பாரா என ஜான் போல்டனிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்தபோது, “ட்ரம்ப் எந்த நிலைப்பாட்டை எடுப்பார் என எனக்கு தெரியவில்லை. அவர் என்ன நிலைப்பாட்டை எடுப்பார் என அவருக்கும் தெரியாது என நம்புகிறேன்.

நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் முடிந்தபின்னர் பிக் சீனா வர்த்தக ஒப்பந்தம் இருக்கிறது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தால் இந்தியாவுக்கு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆதரவளிப்பார் என எந்த உத்தரவாதமும் கிடையாது. இரு நாடுகளுக்கும் இடையேயான வரலாறு குறித்து ட்ரம்புக்கு அதிகம் தெரியாது என கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி