ஆப்நகரம்

தாக்குதல் நடத்தினால் சரியான பதிலடி; இந்தியாவை மிரட்டும் பாகிஸ்தான் பிரதமர்!

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால், இந்தியாவிற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 19 Feb 2019, 8:13 pm
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் கடந்த 14ஆம் தேதி பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில் 44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
Samayam Tamil Imran Khan


இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தானை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மீது கடுமையான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக அந்நாட்டிற்கு வழங்கப்பட்ட ”வர்த்தக ரீதியிலான அனுகூலமான நாடு” என்ற அந்தஸ்தை இந்தியா திரும்ப பெற்றது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தான் உரிய விலை கொடுக்கும் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பயங்கரவாதிகள் மீது தாக்குதல் தொடுக்க, ராணுவத்திற்கு முழு சுதந்திரமும் அளித்து உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில் தங்கள் வலிமையைப் பறைசாற்றும் வகையில் போர் விமான ஒத்திகையை இந்திய ராணுவம் நடத்தி முடித்துள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், எங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுக்கும். புல்வாமா தாக்குதலுக்கும், எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

ஆதாரம் காட்டுங்கள். உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவில் விரைவில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால் எங்கள் மீது கை வைத்தால், தேர்தல் என்றும் பார்க்க மாட்டோம். சரியான பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த செய்தி