ஆப்நகரம்

ரூ.300 கூட சேமிக்க முடியாத ஆட்டோ ஓட்டுநர் வங்கிக் கணக்கில் ரூ.300 கோடி டெபாசிட்!

கராச்சி: ஆட்டோ ஓட்டுநர் வங்கிக் கணக்கில் ரூ.300 கோடி டெபாசிட் செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 29 Oct 2018, 3:20 pm
பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருபவர் முகமது ரஷீத். அதுவும் வாடகை ஆட்டோ என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு ஆண்டில் ரூ.300 சேமிப்பதே மிகவும் கடினமாக இருப்பதாக ரஷீத் கூறி வருகிறார்.
Samayam Tamil Pakistan_Autodriver_AFP


இந்நிலையில் அவரது வங்கிக் கணக்கில் திடீரென்று ரூ.300 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வேறொரு வெளிநாட்டு வங்கிக் கணக்கிற்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த பாகிஸ்தான் மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதற்காக ஆட்டோ ஓட்டுநரை விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பினர்.

இதனால் மிகுந்த அச்சத்திற்கு ஆளான ரஷீத், எங்காவது ஓடிவிடலாம் என்று நினைத்துள்ளார். ஆனால் அவரது உறவினர்களின் ஆலோசனையின் பேரில், தைரியமாக புலனாய்வு துறை அதிகாரிகளைச் சந்திக்கச் சென்றார்.

அந்த விசாரணையில் ரூ.300 கோடி எப்படி தனது வங்கிக் கணக்கிற்கு வந்தது எனத் தெரியவில்லை. அதேபோல் வேறு வங்கிக்கு எப்படி சென்றதும் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

அதற்கு, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் ஏழைகளின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்திக் கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தங்களின் வசதிக்கேற்ப வெளிநாட்டு வங்கிகளுக்கு பணத்தை மாற்றிக் கொள்வதாக குற்றம்சாட்டினர்.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல்கள் தெரிந்தால் உடனடியாக கூறவேண்டும் என்று அறிவுரை கூறி, ரஷீத்தை அனுப்பி வைத்தனர்.

பாகிஸ்தான் நாட்டில் புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் இம்ரான் கான், அனைத்து அரசு நடவடிக்கைகளிலும் சிக்கன நடவடிக்கையை கையாண்டு வருகிறார். மோசடியாக ஈட்டிய பணத்தை மீட்டு, சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்கவும் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி