ஆப்நகரம்

உலகை உலுக்கிய இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் - 7 பேர் அதிரடி கைது!

இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை அடுத்து, 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 21 Apr 2019, 11:16 pm
இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் இன்று காலை 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் 180க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
Samayam Tamil Srilanka Blast


உலகையே உலுக்கியுள்ள இச்சம்பவத்திற்கு, பல்வேறு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் 8 இடங்களில் குண்டு வெடிப்பு: 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்

இலங்கையில் நடந்த 8 தாக்குதல்களில் பெரும்பாலானவை தற்கொலைப்படை தாக்குதல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் ரூவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையின் போது 3 போலீசார் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தப்பியோடிய ஒருவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அனைத்து வெடிகுண்டு தாக்குதல்களையும் நடத்தியவர்கள் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.

இந்நிலையில் குண்டுவெடிப்புக்கு வெடிகுண்டுகளை ஏற்றி செல்ல பயன்படுத்தப்பட்டதாக சந்தேகப்படும் வேன் ஒன்று போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன் ஓட்டுநரையும் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி