ஆப்நகரம்

ஒபாமா, பில் கேட்ஸ், வாரன் என பெரிய தலைகளின் ட்விட்டர் கணக்கு முடக்கம்!

பாரக் ஒபாமா, பில் கேட்ஸ், எலான் மஸ்க் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

Samayam Tamil 16 Jul 2020, 12:51 pm
உலகளவில் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் திடீரென இன்று முக்கிய பிரமுகர்களின் கணக்குகள் ஹேக் (ஊடுருவுதல்) செய்யப்பட்டன. ஹேக் செய்யப்பட்ட கணக்குகளில், பிட்காயின் கிரிப்டோ நாணயங்கள் பற்றிய செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Samayam Tamil ஒபாமா, பில் கேட்ஸ்


முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் ஜோ பிடென், அமேசான் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி ஜெஃப் பெசாஸ், உலகப் பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃப்பெட், எலான் மஸ்க், பில் கேட்ஸ், அமெரிக்க ராப் இசைக் கலைஞர் கென்யீ வெஸ்ட் உள்ளிட்ட பலரது கணக்குகளும் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

ஹேக் செய்யப்பட்ட கணக்குகளில் வெளியான ட்வீட்டில், மக்கள் அனுப்பும் தொகை இருமடங்காக திருப்பித் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, 1000 டாலர் கொடுத்தால் 2000 டாலர் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ட்வீட்டுகள் உடனடியாக நீக்கப்பட்டுவிட்டாலும், கணக்குகளை திரும்பப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் கணக்கில் இந்த செய்தியை நீக்கியபிறகு மீண்டும் மறுமுறை ஹேக்கர்களால் பதிவிடப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து ட்விட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள ட்வீட்டில், “ட்விட்டர் கணக்குகளை பாதிக்கும் வகையில் நடைபெற்றுள்ள பாதுகாப்பு பிரச்சினை குறித்து நாங்கள் அறிவோம். இதுபற்றி நாங்கள் விசாரித்து வருகிறோம். பிரச்சினையை சரிசெய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கணக்குகளை ட்விட்டர் நிர்வாகம் லாக் செய்துள்ளது. பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்ட பிறகு கணக்குகளின் சொந்தக் காரர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி