ஆப்நகரம்

கெஞ்சும் புடின் நண்பர் மனைவி: யார் இந்த விக்டர் மெட்வெட்சுக்?

உக்ரைன் அரசால் கைது செய்யப்பட்டுள்ள விக்டர் மெட்வெட்சுக்கை விடுவிக்குமாறு அவரது மனைவி ஒக்சானா மர்ச்சென்கோ வேண்டுகோள் விடுத்துள்ளார்

Samayam Tamil 16 Apr 2022, 5:38 pm
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் இதுவரை எவ்வித ஆக்கப்பூர்வமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை. இதனிடையே, ரஷ்ய ஆதரவாளர்களை உக்ரைன் அரசு கைது செய்து வருகிறது. அந்த வகையில், ரஷ்ய அதிபர் விளாடிமர் புடினின் நண்பராக அறியப்படுபவரும், உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு கட்சியின் முன்னாள் தலைவரும் விக்டர் மெட்வெட்சுக் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
Samayam Tamil விக்டர் மெட்வெட்சுக், ஒக்சானா மர்ச்சென்கோ
விக்டர் மெட்வெட்சுக், ஒக்சானா மர்ச்சென்கோ


கைவிலங்கு அணிவிக்கப்பட்ட நிலையில், அவரது புகைப்படத்தை வெளியிட்ட உக்ரைன் அதிபர் வோலோடிமர் ஜெலன்ஸ்கி, உக்ரைன் ராணுவத்தினரை விடுதலை செய்தால் விக்டர் மெட்வெட்சுக்கை விடுதலை செய்யத் தயார் என்று அறிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் செய்தியாளர்களை சந்தித்த விக்டர் மெட்வெட்சுக்கின் மனைவி ஒக்சானா மர்ச்சென்கோ, உக்ரைன் அதிகாரிகள் தனது கணவரைக் கைது செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் அவர் தாக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளதாக தெரிவித்தார்.

விக்டர் மெட்வெட்சுக்


இந்த நிலையில், உக்ரைன் அரசால் கைது செய்யப்பட்டுள்ள விக்டர் மெட்வெட்சுக்கை விடுவிக்குமாறு அவரது மனைவி ஒக்சானா மர்ச்சென்கோ அந்நாட்டு அதிபர் வோலோடிமர் ஜெலன்ஸ்கிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். எனது கணவரை உடனடியாக விடுவிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தனது யூடியூப் சேனலில் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைனின் சட்டங்கள் மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு மாறாக, அரசியல் காரணங்களுக்காக தனது கணவர் துன்புறுத்தப்படுகிறார் என்பதில் சந்தேகமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் பணக்கார தொழிலதிபர்கள் தொடர்பான ஃபோர்ப்ஸ் பட்டியலில் கடந்த ஆண்டு 12ஆவது இடத்தை பிடித்த விக்டர் மெட்வெட்சுக், ஐரோப்பிய யூனியனில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருபவர். உக்ரைனின் மக்கள் பிரதிநிதியாக (People's Deputy of Ukraine) கடந்த 2019ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 2018 முதல் 2022 வரை ரஷ்ய ஆதரவு அமைப்பான Ukrainian Choiceஇன் தலைவராகவும் இருந்துள்ளார். அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினராக 1997 முதல் 2002 வரை இருந்துள்ளார்.
ரஷ்யாவுக்குள் நுழைய பிரிட்டன் பிரதமருக்கு தடை!
2002 மற்றும் 2005 காலகட்டத்தில் முன்னாள் உக்ரேனிய அதிபர் லியோனிட் குச்மாவின் தலைமை அதிகாரியாக பணியாற்றிய விக்டர் மெட்வெட்சுக் 2018ஆம் ஆண்டு வரை தேசிய அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார். ரஷ்யா கைபற்றிய உக்ரைனின் கிரீமியா தீபகற்ப விவகாரத்தில் தேசத்துரோகம் மற்றும் தேசிய வளங்களை சூறையாட முயற்சித்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 2021ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி முதல் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டிருந்த விக்டர் மெட்வெட்சுக், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த 4 நாட்களில் அதாவது கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி மாயமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி