ஆப்நகரம்

எரிவாயு சிலிண்டர் குடோனில் தீ விபத்து: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே எரிவாயு சிலிண்டர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 29 Sep 2022, 7:48 am
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே தேவரியம்பாக்கம் கிராமத்தில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்தவரும், தற்போதைய தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவருமான அஜய்குமார் எனவருடைய தம்பி ஜீவானந்தம் என்பவர் ஏ.எஸ்.என்.கேஸ் ஏஜென்சி என்ற பெயரில் எரிவாயு சிலிண்டர் குடோன் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த கேஸ் குடோனில் இருந்து ஒரகடம் சுற்றுவட்டார தொழிற்சாலைகளுக்கு வணிக ரீதியான கேஸ் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
Samayam Tamil 12 injured after lpg gas cylinder godown fire accident near Kanchipuram


இந்நிலையில் நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் ஜீவானந்தத்தின் வீட்டின் அருகில் உள்ள இந்த கேஸ் குடோனில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயானது மளமளவென பரவியதை தொடர்ந்து எதிர்பாராத விதமாக கேஸ் குடோனில் இருந்த கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியுள்ளது.

விபத்து குறித்து அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் ஆர்நிஷா பிரியதர்ஷினி தலைமையில் காஞ்சிபுரம், மறைமலைநகர், ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து 7 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் வீட்டின் அருகிலேயே இருந்த கேஸ் குடோன் உரிமையாளர் ஜீவானந்தம், பூஜா 19, கிஷோர் 13, கோகுல் 22, நிவேதா 21, தமிழரசன் 10, அருண் 22, குணால் 22,சந்தியா 21, சக்திவேல் 32 , சண்முகப்பிரியன், ஆமோத்குமார் என மொத்தம் 12 பேர் 90 விழுக்காடு தீக்காயங்களுடன் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்ட தீயணைப்புத்துறையினர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர், வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, உத்திரமேரூர் தொகுதி எம்எல்ஏ க.சுந்தர், காஞ்சிபுரம் எம்.பி செல்வம் ஆகியோர் மீட்பு பணிகளை பார்வையிட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
80 ஆயிரம் ரூபா ட்ரோன் ஆர்டர்... வெறும் 100 ரூபா காரை அனுப்பிய பிளிப்கார்ட்- காஞ்சியில் ஷாக்!

இதனிடையே, விபத்து தொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவராக உள்ள அஜய்குமார், அவரது மனைவி சாந்தி, உரிமையாளர் ஜீவானந்தம், பொன்னிவளவன் மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி