ஆப்நகரம்

நவராத்திரி பூஜை: பவனி செல்ல அனுமதி கேட்டு குமரியில் போராட்டம்

பத்மநாபபுரம் முதல் திருவனந்தபுரம் வரை விக்ரகங்களை பவனியாக நடந்து கொண்டு செல்ல அனுமதிக்க கேட்டு இந்து இயக்கங்கள் சார்பில் கல்குளம் தாலுக்கா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Samayam Tamil 10 Oct 2020, 7:01 am
திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவுக்கு கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கொண்டு செல்லப்படும் சாமி சிலைகளை, கொரோனா விவகாரத்தால் நடந்து கொண்டு செல்லாமல் வாகனத்தில் ஏற்றிச் செல்ல கேரள அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், பாரம்பரிய முறைப்படி பவனியாக நடந்து கொண்டு செல்ல கேட்டு இந்து இயக்கங்கள் கல்குளம் தாலுக்கா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Samayam Tamil போராட்டம்


திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக பத்மநாபபுரம் விளங்கியது. மன்னராட்சிக் காலத்தின் போது பத்மநாபபுரம் அரண்மனையில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. அதன் பின்னர் தலைநகரம் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்ட பின், பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்கு சிலைகள் ஒவ்வொரு ஆண்டும் அனுப்பட்டு வருகின்றன.

குறிப்பாக பத்மநாபபுரம் தேவார கட்டு சரஸ்வதி, குமாரகோவில் முருகன் ,சுசீந்திரம் முன்னுதித்த நங்கை ஆகிய மூன்று விக்ரகங்களும் பத்மநாபபுரம் அரண்மனையிலிருந்து பண்டைய திருவிதாங்கூர் மன்னரின் உடைவாளும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு பவனியாக நடந்து கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

தமிழக கேரள மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் இரு மாநில மக்களும் ஒன்றிணைந்து நடத்தும் இவ்விழாவில் தமிழக கேரள எல்லையான களியக்காவிளையில் கேரள அரசின் பிரதிநிதிகள் விக்கிரகங்களை வரவேற்று திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்வார்கள்.



திருவனந்தபுரத்தில் விக்கிரகங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் உட்பட பல்வேறு வகையான போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடைபெறும். இப்படிப்பட்ட பாரம்பரியமான நிகழ்ச்சி இந்த ஆண்டு கொரோனா விவகாரத்தால் எளிமையாக நடத்துவதற்கு கேரள அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி விக்ரகங்களை பவனியாக கொண்டு செல்லாமல் வாகனங்களில் பத்மநாபபுரத்தில் இருந்து கேரளாவுக்கு ஏற்றிச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், நூற்றாண்டு பழமை வாய்ந்த பாரம்பரிய நிகழ்ச்சியை மாற்றும் வகையில் கேரள அரசு தற்போது விக்கிரகங்களை வாகனங்களில் ஏற்றிச் செல்ல முடிவு எடுத்திருப்பது வேதனை அளிப்பதாக தெரிவிக்கும் இந்து இயக்கங்கள், கொரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளின்படி தனிநபர் இடைவெளியுடன் பத்மநாபபுரம் முதல் திருவனந்தபுரம் வரை விக்ரகங்களை பவனியாக நடந்து கொண்டு செல்ல அனுமதிக்க கேட்டு இந்து இயக்கங்கள் சார்பில் கல்குளம் தாலுக்கா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் பத்மநாபபுரம் தக்கலை சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

அடுத்த செய்தி