ஆப்நகரம்

விஏஓவை தாக்கிய ராணுவ வீரர்: குடிபோதையில் நிகழ்ந்த விபரீதம்!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) மீது சரமாரி தாக்குதல் நடத்திய ராணுவ வீரரை கைது செய்ய வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Samayam Tamil 9 May 2020, 12:30 am
கன்னியாகுமரி மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
Samayam Tamil vao


குமரி மாவட்டம், ஆறுதேசம் கிராம நிர்வாக அலுவலராக ராஜேஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கொரோனா பணிக்காக அவரது கிராமத்துக்கு உட்பட்ட ஆலங்கோடு என்ற இடத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் இருந்த ஆசாமி ஒருவர் ராஜேஷிடம் தகாத வார்த்தை பேசி அவரை தாக்கினார்.

இதில் படுகாயம் அடைந்த கிராம நிர்வாக அலுவலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காததால் அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம்!

கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய மணிகண்டன் என்பவரை கைது செய்ய கோரி நித்திரவிளை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் மணிகண்டன் ராணுவ வீரர் என்பது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்யவில்லை.

மேலும் இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் ஆகியோரை சந்தித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க மனு அளிக்கப்பட்டது.

இதுவரை அவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கிராம நிர்வாக அலுவலரை பணி செய்யவிடாமல் தாக்கிய மணிகண்டனை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

பலசரக்கு குடோனில் குட்கா பதுக்கல்; கன்னியாகுமரியில் இருவர் கைது

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர்கள் கூறுகையில், " எங்களது இந்த கோரிக்கையை வலியுறுத்தி,குமரி மாவட்டத்தை சேர்ந்த 160 கிராம நிர்வாக அலுவலர்கள் இன்று கொரோனா தடுப்பு பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

மணிகண்டனை கைது செய்து நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் நாங்கள் அனைவரும் கொரோனா பணிகளில் ஈடுபட போவதில்லை" என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி