ஆப்நகரம்

கள்ளச்சாராய வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் உட்பட 3 பேர் கைது!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, கள்ளச்சாராயம் காய்ச்சிய முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 24 Apr 2020, 3:36 pm
கொரோனா வைரஸ் கொள்ளை நோய் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கால் மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதன் விளைவாக தமிழகம் உட்பட பல பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக போலீசார் சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பல பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை வெகுவாக நடந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Samayam Tamil கள்ளச்சாராய வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் உட்பட 3 பேர் கைது


இந்நிலையில், மார்த்தாண்டம் காவல் ஆய்வாளர் ஆதிலிங்கம், துணை ஆய்வாளர் முத்துசாமி சிவசங்கர் உள்ளிட்ட போலீசார் மார்த்தாண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நட்டாலம் பகுதியில் கள்ளச்சாராயம் நடைபெற்று வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். நட்டாலம் கீழ்விலையைச் சேர்ந்த முன்னாள் எல்லை பாதுகாப்பு வீரரான ரசல் ராஜ் என்பவரின் தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது.

அவரது தோட்டத்தில் வாடகைக்கு குடியிருக்கும் குமார் மற்றும் அவருடைய மனைவி ஷீபா, சுரேஷ் ஆகியோர் சேர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதற்கு ரசல் ராஜும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரசல் ராஜ், ஷீபா, சுரேஷ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர் குமார் தப்பியோடிவிட்டார். அவர்களிடமிருந்து இரண்டு லிட்டர் சாராயம், 100 லிட்டர் சாராய ஊறல், சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட கேஸ் சிலிண்டர் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். அவர்கள் மூவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி