ஆப்நகரம்

கரூர் வீரர் வாசுதேவன் உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்!

குஜராத் மாநிலத்தில் நடை பயிற்சியின் போது மாரடைப்பால் உயிரிழந்த கரூர் நச்சலூரை சேர்ந்த ராணுவ வீரர் வாசுதேவன் உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Samayam Tamil 18 May 2022, 7:43 am
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நச்சலூர் வ.உ.சி நகர் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன் (57). இவர் இந்திய இராணுவத்தில் கடந்த 1989-ம் ஆண்டு பணிக்கு சேர்ந்தார். இதையடுத்து கொல்கத்தாவில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்த நிலையில் பதவி உயர்வு பெற்று கடந்த மே 1-ம் தேதி குஜராத் மாநிலத்தில் மெயின் சிட்டி எல்லை பாதுகாப்பு படையின் அலுவலக பணியில் உதவி துணை ஆய்வாளராக அங்கு பணியாற்றி வந்துள்ளார்.
Samayam Tamil Indian Army


மே 15-ம் தேதி காலை நடைப்பயிற்சி சென்ற போது திடீரென கீழே மயங்கி விழுந்துள்ளார். அருகில் இருந்த சக ராணுவ வீரர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவரின் மனைவிக்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளனர். உயிரிழந்த வாசுதேவனுக்கு பரிமளா(45), சோனாலி (24), ஆர்த்தி (21) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் முதல் மகள் சோனாலிக்கு திருமணம் ஆகிவிட்டது. இரண்டாவது மகள் திருச்சியில் உள்ள தனியார் கல்லுரியில் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றார்.

குஜராத்தில் வாசுதேவன் உடலுக்கு ராணுவ வீரர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செய்தனர். பிறகு தனி ஹெலிஹாப்டரில் அவரின் உடல் கோயம்புத்தூர் வரை கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ராணுவ வாகனம் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. நச்சலூரில் உள்ள அவரது வீட்டில் உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பின்னர், அவரது வீட்டில் இருந்து நச்சலூர் கடைவீதி வழியாக ஊர்வலமாக சென்று மயானத்திற்கு கொண்டு சென்று ராணுவ எல்லை பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் ஜோசப் தேவசியா முன்னிலையில் ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தினர். அதன் பிறகு 18 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக குளித்தலை எம்.எல்.ஏ இரா.மாணிக்கம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் வாசுதேவன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அடுத்த செய்தி