ஆப்நகரம்

மின் இணைப்புக்கு லஞ்சம்; மின்வாரிய அதிகாரி கைது!

கிருஷ்ணகிரியில் மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின் செயற்பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 31 Jul 2021, 11:03 am
கிருஷ்ணகிரி அருகே உள்ள பெத்ததாளப்பள்ளியை சேர்ந்தவர் சந்திரகுமார். இவர், புதிதாக தொழில் தொடங்குவதற்காக தனது கட்டிடத்திற்கு மின் இணைப்பு கேட்டு கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து இருந்தார்.
Samayam Tamil கைது செய்யப்பட்ட அதிகாரி
கைது செய்யப்பட்ட அதிகாரி


நீண்ட நாட்களாக மின் இணைப்பு வழங்காததால் சந்திரகுமார் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று செயற்பொறியாளர் சுதாகரனை அணுகினார்.

அப்போது அவரிடம் பேசிய அதிகாரி சுதாகரன் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் உடனடியாக மின் இணைப்பு வழங்குவதாக தெரிவித்தார். ஆனால், மின் இணைப்புக்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத சந்திரகுமார் இதுகுறித்து கிருஷ்ணகிரியில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில் புகார் செய்தார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ரசாயன பவுடர் தடவிய ரூ.3 ஆயிரத்தை சந்திரகுமார் நேற்று காலை கிருஷ்ணகிரி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று செயற்பொறியாளர் சுதாகரனிடம் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சையத் சுல்தான் பாஷா மற்றும் போலீசார் கையும், களவுமாக செயற்பொறியாளர் சுதாகரனை பிடித்து கைது செய்தனர்.

கண் திறந்து பார்த்த அம்மன்?; செல்பிக்கு திரளும் பக்தர்கள்!

இதைத்தொடர்ந்து அவரை விசாரணைக்காக கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். கிருஷ்ணகிரியில் புதிய மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய செயற்பொறியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி