ஆப்நகரம்

ஓசூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்து: ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்!

ஓசூர் மாநகராட்சி குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.25 லட்சம் மதிப்பிலான அரவை இயந்திரம் தீக்கிரையானது.

Samayam Tamil 26 Sep 2022, 8:34 am
ஓசூர் ஆனந்த் நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் குப்பை கிடங்கு உள்ளது. ஒசூர் மாநகராட்சியில் 45 வார்டுகளிலும் சேமிக்கப்படும் குப்பை கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் இங்கு சேமிக்கப்பட்டு வருகிறது. சேமிக்கப்படும் குப்பைகள் இயந்திரங்கள் மூலம் அரவை செய்யப்பட்டு பின்னர் பிளாஸ்டிக் தார் சாலை பயன்பாடுகளுக்கு பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil Hosur fire accident


இந்த நிலையில் இன்று இந்த மாநகராட்சி குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற ஓசூர் தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து நீண்ட நேரம் போராடி தீயை அனைத்தனர்.

இந்த தீ விபத்தில் குடோனில் சேமித்து வைத்திருந்த சுமார் 10 டன் அளவிலான மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் முற்றிலும் எரிந்து நாசமானது. குடோனில் இருந்த 25 லட்சம் மதிப்புள்ள அரவை இயந்திரமும் எரிந்து சேதமானது. தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது.

இதுகுறித்து அறிந்த ஓசூர் சிப்காட் காவல் துறையினர் மற்றும் ஓசூர் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

மாநகராட்சி உறுப்பினர்கள் அப்பகுதிக்கு சென்று தீயை அணைக்க துரித நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

அடுத்த செய்தி