ஆப்நகரம்

எதிர்கட்சி கேள்வி கேட்டால் ஏகடியம் செய்வதா? - பொங்கிய ஆர்.பி.உதயகுமார்!

அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளின் அறிக்கைகள் மற்றும் கேள்விகளை திமுக அமைச்சர்கள் ஏகடியம்(கிண்டல்) செய்வதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

Samayam Tamil 15 Aug 2022, 4:32 pm
நாட்டின் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி உதயகுமார் மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் தேசியக் கொடியேற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து குடியிருப்போர் நலச்சங்கத்தை சேர்ந்த பொதுமக்களுக்கும், அந்தப் பகுதியில் பணி செய்யும் தூய்மை பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் தேசியக்கொடிகளையும் வழங்கியதோடு, இனிப்புகளை வழங்கி சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Samayam Tamil RB Udhayakumar


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: -
"பிரதமர் மோடி இந்திய நாட்டை வல்லரசாக்க உழைத்து கொண்டுள்ளார். போதைபொருள் பயன்பாடு அதிகரிப்பால் தான் பல்வேறு சமூகவிரோத செயல்கள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. ஆன்லைன் ரம்மி மற்றும் போதைப்பொருள் பயன்பாடுகளில் இருந்து இளைய தலைமுறையை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் அதிகளவில் புழக்கத்தில் உள்ள போதைப்பொருட்களை போர்க்கால அடிப்படையில் தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழகத்தில் பட்டப்பகலில் வங்கியை கொள்ளையடிக்கும் சம்பவம் நடப்பதை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி பல்வேறு விமர்சனத்தை கடந்து தமிழ்நாட்டிற்காகவும், தமிழக மக்களுக்காகவும் அனைத்தையும் பொறுத்துக்கொண்டு சிறந்த தலைமையின் மொத்த வடிவமாக உள்ளார்.
வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 45-ஆவது பிறந்தநாள்; கேக் வெட்டி கொண்டாடிய பயணிகள்!

நாணயத்தின் இருபக்கங்களாக ஆளுங்கட்சியாக எதிர்க்கட்சி இருக்க வேண்டும். ஒரு பக்கம் மட்டும் இருந்தால் அந்த நாணயமே செல்லாது. ஆளுங்கட்சி என்பது கொதிக்கும் பானை. அதை பக்குவப்படுத்தி பதம் பார்ப்பது தான் எதிர்க்கட்சி வேலை. நிதியமைச்சர் முதல் அனைத்து அமைச்சர்களும் எங்கள் குற்றச்சாட்டு மற்றும் அறிக்கையை உள்வாங்கி கொண்டு தீர்வு காண வேண்டும்.

எதிர்க்கட்சித்தலைவர் குறைகளை சுட்டிக்காட்டும் போதும் ஏளனமாக பேசுவதை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அமைச்சர்கள் ஏகத்தாளம் ஏகடியம் மமதையுடன் பேசுவதை ஜனநாயகம் மன்னிக்காது. எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுகளை அறிக்கைகளை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி எந்தக் கேள்வியை முன்வைத்தாலும் அரசு அதனை உள்வாங்கிக் கொண்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு கூறினார்.

அடுத்த செய்தி