ஆப்நகரம்

மதுரை போலீஸ் அடியால் தூக்கில் பிணமாக தொங்கிய தூய்மை பணியாளர்!

மதுரை பைக்கரா பகுதியில் நடைபெற்ற 150 பவுன் நகை திருட்டில் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 13 Feb 2021, 12:39 am
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பைக்கரா பகுதியில் கடந்த வாரம் ஒரு வீட்டில் 150 பவுன் நகை மற்றும் 6 லட்சம் பணம் திருடு போனது. இந்த வழக்கை சுப்ரமணியபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Samayam Tamil மதுரை போலீஸ் அடியால் தூக்கில் பிணமாக தொங்கிய தூய்மை பணியாளர்!


இந்த நிலையில் சில தினங்களாக இந்த வழக்கில் தொடர்புடைய சிலரை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் திருப்பரங்குன்றம் ராஜிவ்காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த கண்ணன்(43) என்ற துப்புரவுப் பணியாளரும் ஒருவர்.

விசாரணை எனக் கண்ணனை அழைத்துச் சென்ற போலீசார், அடித்துத் துன்புறுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த சூழலில் கண்ணன் மற்றும் அவரது மனைவி தனலட்சுமியை விசாரணைக்காகக் காவல் நிலையம் வரச் சொல்லியுள்ளனர். கண்ணன் தனது மனைவியை முன்னே செல்லும்படியும் தான் பின்னால் வருவதாகவும் கூறி காவல் நிலையத்திற்கு அனுப்பியுள்ளார்.

இதைக் கேட்டு தனலட்சுமி வீட்டிலிருந்து பேருந்து நிலையம் சென்றுள்ளார். நீண்ட நேரம் காத்திருந்தும் கண்ணன் வராத காரணத்தால் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கண்ணன் தூக்கில் தொங்கியபடி சடலமாகக் கிடந்துள்ளார்.

இந்த தகவல் அறிந்து வந்த திருப்பரங்குன்றம் போலீசார் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி