ஆப்நகரம்

குவாரிகள் திறக்க, செயல்பட ஐகோர்ட் தடை விதித்துள்ளது...

கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் ஏற்கனவே இருக்கும் குவாரிகளை மூடவும் புதிதாக குவாரிகள் தொடங்க அனுமதிக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 1 Dec 2020, 7:50 pm
கன்னியாகுமரி மாவட்ட சூழல் உணர்திறன் மண்டலத்தின் எல்லையைப் பூஜ்ஜியம் முதல் 3 கிலோமீட்டர் என நிர்ணயம் செய்த அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறபித்துள்ளது.
Samayam Tamil குவாரிகள் திறக்க, செயல்பட ஐகோர்ட் தடை விதித்துள்ளது...
குவாரிகள் திறக்க, செயல்பட ஐகோர்ட் தடை விதித்துள்ளது...


இந்த வழக்கு விசாரணையின்போது, “மொழி முக்கியமானது. தகவல் தொடர்பில் முக்கிய பங்காற்றுவது. ஆகவே மத்திய அரசு தங்களின் அறிவிப்புகளை வெளியிடும் போது இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமல்லாது, அந்தந்த பகுதி மக்கள் புரிந்து கொள்ளும் வகையில், அப்பகுதி மக்களின் மொழியிலும் அறிவிப்பு மற்றும் விபரங்களை வெளியிட வேண்டும்” என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.

குமரி மாவட்டம் தோவாளையைச் சேர்ந்த சதீஷ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெரும்பாலானவை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளன. இந்நிலையில் குமரி மாவட்டப் பகுதியில் உள்ள, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. அதன் எல்லை நிர்ணயம் தொடர்பான பொது மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம்கூட முறையாக நடத்தப்படாமல், கொரோனா நோய்த்தொற்று காலத்தில் கருத்துக் கேட்பதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இருப்பினும் செய்தித்தாள்களில் அவை விளம்பரப்படுத்தப் படவில்லை. சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்கனவே அதை சுற்றியுள்ள 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு எவ்வித குவாரி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படக்கூடாது என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் எல்லையை 0 முதல் 3 கிலோ மீட்டர் தூரம் என நிர்ணயம் செய்வது தொடர்பாகவே இந்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

ஆனால் பொதுமக்கள் தங்களது கருத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படவில்லை. இந்நிலையில் செப்டம்பர் 22ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சூழல் உணர்திறன் மண்டலத்தின் எல்லையை 0 முதல் 3 கிலோ மீட்டர் வரை என நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது ஏற்கத்தக்கதல்ல. குவாரி நடைபெறும் இடங்களில் 0 எனவும், விவசாயம் நடைபெறும் இடங்களில் 3 கிலோ மீட்டர் வரை எனவும் பல இடங்களில் தவறுகளும் நிகழ்ந்துள்ளன. ஆகவே சூழல் உணர்திறன் மண்டலத்தின் எல்லையை 0விலிருந்து 3 கிலோமீட்டர் என நிர்ணயம் செய்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

11 மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க அனுமதி மறுப்பு: ஐகோர்ட்!

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, “பொதுமக்களிடம் முறையாகக் கருத்துக் கேட்பு நடத்தாமல் குமரி மாவட்ட சூழல் உணர்திறன் மண்டலத்தின் எல்லையை 0 முதல் 3 கிலோமீட்டர் என நிர்ணயம் செய்த அரசாணைக்கு இடைக்காலத் தடை” என உத்தரவிட்டனர்.

மேலும் கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் ஏற்கனவே இருக்கும் குவாரிகளை மூடவும் புதிதாக குவாரிகள் தொடங்க அனுமதிக்கக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்தனர். தொடர்ந்து மொழி குறித்து, அரசு வெளியிடும் அறிவிப்புகள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் உத்தரவிட்டனர். இதையடுத்து, வழக்கு விசாரணையை டிசம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அடுத்த செய்தி