ஆப்நகரம்

11 மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க அனுமதி மறுப்பு: ஐகோர்ட்!

11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதால் அதைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர இயலாது எனச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

Samayam Tamil 1 Dec 2020, 2:10 pm
காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் மருத்துவக் கல்லூரிகள் இருப்பதால் புதிதாகத் தனியார் மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க அனுமதியளிக்க வேண்டாம் என மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையே, அடுத்த ஆண்டு முதல் புதிதாகத் தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் என அரசுத்தரப்பு தெரிவித்துள்ளது.
Samayam Tamil 11 மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க அனுமதி மறுப்பு: ஐகோர்ட்!
11 மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க அனுமதி மறுப்பு: ஐகோர்ட்!


மதுரையைச் சேர்ந்த வாசுதேவா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “2020-21ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புக்கான கலந்தாய்வில் தமிழ்நாட்டில் புதிதாகத் துவக்கப்பட உள்ள ராமநாதபுரம், விருதுநகர், நாமக்கல், திண்டுக்கல் உட்பட 11 அரசு மருத்துவக் கல்லூரிகளைக் கலந்தாய்வு பட்டியலில் சேர்க்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தது.

மேலும் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆனால் தற்போது 2020-21ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பிற்காக நீட் தேர்வு முடிந்து அதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தற்போது கலந்தாய்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த கலந்தாய்வு பட்டியலில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகளைச் சேர்க்கவில்லை. இது ஏற்கத்தக்கதல்ல, தற்போது நடைபெறும் கலந்தாய்வில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளைக் கலந்தாய்வு பட்டியலில் சேர்த்தால், மருத்துவ படிப்பிற்கான இட ஒதுக்கீடு சதவீதம் அதிகரிக்கும், இதனால் பல மாணவர்கள் பயனடைவார்கள்.

தங்கத்தின் விலைக்கு இணையாக மணல் விற்பனை: உயர் நீதிமன்ற கிளை வேதனை!

தற்போது புரெவி புயல் காரணமாக மருத்துவ கலந்தாய்வு தள்ளிவைக்கப் பட்டுள்ளது. எனவே 2020-21ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ கலந்தாய்வில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகளைச் சேர்க்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு, “தமிழ்நாட்டில் எத்தனை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன?” எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசுத்தரப்பில், “26 அரசு மருத்துவக் கல்லூரிகளும் 14 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. புதிதாகத் தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அடுத்த ஆண்டு தொடங்கப்படும்” எனத் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், “போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இன்றி மருத்துவக் கல்லூரிகளைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர இயலாது” எனத் தெரிவித்தனர். மேலும் நீதிபதிகள், “காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் மருத்துவக் கல்லூரிகள் இருப்பதால் புதிதாகத் தனியார் மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க அனுமதியளிக்க வேண்டாம்” என அறிவுறுத்தியுள்ளனர். தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பினை நீதிபதிகள் ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

அடுத்த செய்தி