ஆப்நகரம்

மாற்றுத் திறனாளிகளுக்கு தனி நீதிமன்றம்... அரசுகள் பதிலளிக்க ஆணை

சாய்வு தளங்கள் போன்ற வசதிகளுடன் கூடிய சிறப்பு நீதிமன்றமும், அவர்களுக்கு உதவும் வகையில் சிறப்பு அரசு வழக்கறிஞர்களையும் நியமிக்க உத்தரவிட வேண்டும்.

Samayam Tamil 28 Nov 2020, 9:45 am
உடல் ஊனமுற்றோர் மற்றும் மன நலம் பாதிக்கப்பட்டோருக்கு என சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்க கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Samayam Tamil madurai-high-court


மதுரை மாகாளிப்பட்டி பகுதியை சேர்ந்த மணிபாரதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், "நமது நாட்டில் 2.68 கோடி பேர் மன நலம் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர்.

இதில் பலர் நடக்க இயலாத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் ஆசிட் வீச்சு, விபத்துகள், இடிபாடுகளில் சிக்கியும் ஊனமுற்றவர்களாக மாறி சிரமப்பட்டு வருகின்றனர். இவர்கள் தங்கள் உரிமைகள் பெறுவதற்கு பல்வேறு போராட்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது.

சமாதியில் எடுத்த மூன்று சபதம்: நிறைவேற்ற தயாராகும் சசிகலா

இது போன்ற மாற்றுத்திறனாளிகள் சிலர் நீதிமன்றங்களுக்கு செல்லும் போது பல்வேறு சங்கடங்களை சந்திக்க வேண்டியுள்ளது.
மேலும் பலர் தாழ்வு மனப்பான்மையால் வெளியிடங்களுக்கு சென்று வராமல் வீட்டிலேயே முடங்கி விடுகின்றனர்.

இவர்கள் தங்களுக்கு தேவையானவற்றை அரசிடம் பெறுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு அரசு 2016ம் ஆண்டில் மனநலச் சட்டத்தின் படி சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என விதிகளை இயற்றி இருந்தது.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே மாவட்டந்தோறும் ஊனமுற்றவர்கள் வந்து செல்வதற்கு வசதியாக, சாய்வு தளங்கள் போன்ற வசதிகளுடன் கூடிய சிறப்பு நீதிமன்றமும், அவர்களுக்கு உதவும் வகையில் சிறப்பு அரசு வழக்கறிஞர்களையும் நியமிக்க உத்தரவிட வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்

அடுத்த செய்தி