ஆப்நகரம்

வார சந்தை நடத்த தடை: மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

சிவகங்கை மாவட்டம் தெக்கூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிவன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வார சந்தை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.

Written byபிரபாகர் B | Samayam Tamil 13 Apr 2023, 5:05 pm
சிவகங்கை மாவட்டம் தெக்கூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் நகர சிவன் கோயில் சார்பாக கோவில் நிர்வாகி தனிக்காசலம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், கோவிலுக்கு சொந்தமான பகுதிகளில் இருக்கக்கூடிய ஆக்கிரமிப்பு மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றக்கோரி ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.
Samayam Tamil court order file pic
court order file pic


பஞ்சாயத்து தலைவர் மீது புகார்

மேலும், சிவன் கோயிலுக்கு சொந்தமான மற்றொரு நிலம் இருக்கக்கூடிய இடங்களில் கற்களை உடைத்து அகற்றிவிட்டு தெற்கூர் பஞ்சாயத்து தலைவர் அங்கு கோவில் நிர்வாகத்திடம் எந்தவித அனுமதியும் பெறாமல் வார சந்தை நடத்தி வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனவே, கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக வாரச்சந்தை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை கிராம பஞ்சாயத்து தலைவர் பயன்படுத்துவதை தடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

வார சந்தை நடத்த தடை

இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசரனைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி கோவிலுக்கு சொந்தமான இடத்தை வார சந்தை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதனை தொடர்ந்து, கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சந்தை நடத்த அனுமதி இல்லை என உத்தரவிட்ட நீதிபதி, கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள அளவு கற்களை அகற்ற பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வித உரிமையில்லை என திட்டவட்டமாக கூறினார். இது குறித்து பஞ்சாயத்து தலைவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
எழுத்தாளர் பற்றி
பிரபாகர் B
கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவன். ஊடகத்துறையில் 4 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகிறேன். எழுத்தால் சமூகத்தில் பெரிய மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதே எனது கருத்து. தற்போது சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி