ஆப்நகரம்

ரூ.100 கோடிப்பே... மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உண்டியல் வருமானம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உண்டியல் வருமாணம் கடந்த 15 ஆண்டுகளில் ரூ.100 வசூலாகியுள்ள தகவல் வெளியாகியுள்ளது

Authored bySM Prabu | Samayam Tamil 5 Dec 2022, 2:07 pm
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 15 ஆண்டுகளில் வசூலான உண்டியல் தொகை மட்டும் ரூ.100 கோடி என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக தெரிய வந்துள்ளது.
Samayam Tamil மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்


உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில், மதுரையின் ஆன்மிக அடையாளமாக மட்டுமன்றி, தொன்மைக்குரிய பெருமிதமாகவும் திகழ்ந்து வருகிறது. மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நாள்தோறும் மதுரை, வெளி மாவட்டங்கள் மட்டுமன்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மீனாட்சி அம்மனை தரிசித்து செல்கின்றனர்.

கோவிலைச் சார்ந்துள்ள பொருளாதாரம் மதுரையின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றுகிறது. கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் கோவிலின் உள்ளே பக்தர்கள் வருவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அவற்றில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதால், மீண்டும் இயல்பு நிலைக்கு மீனாட்சி அம்மன் கோவில் திரும்பியுள்ளது.

இதன் காரணமாக நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. பக்தர்களின் காணிக்கையைப் பெறுவதற்கு கோவிலுக்குள் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கோவில் நிர்வாகம் சார்பில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளில் மீனாட்சி அம்மன் கோவிலின் உண்டியலில் மட்டும் எவ்வளவு வசூலாகியுள்ளது என்பது குறித்து மதுரையைச் சேர்ந்த ஆர்டிஐ தன்னார்வலர் முத்துப்பாண்டி என்பவர் கோவில் நிர்வாகத்திடம் தகவல் கேட்டிருந்தார்.

கள்ளழகர் கோயிலில் பிரமாண்டம்: பக்தர்கள் ஹேப்பி!
அதில் வழங்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில், கடந்த 2008ஆம் ஆண்டு துவங்கி 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை 100 கோடியே 20 லட்சத்து 60 ஆயிரத்து 913 ரூபாய் வசூலாகியுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் பெருந்தொற்றுக் காலத்துக்கு முந்தைய ஆண்டான 2018-2019-இல் மட்டும் அதிகபட்சமாக 9 கோடியே 82 லட்சத்து 84 ஆயிரத்து 220 ரூபாய் வசூலாகியுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2008-2009-ஆம் ஆண்டில் மிகக் குறைவாக 3 கோடியே 44 லட்சத்து 48 ஆயிரத்து 221 ரூபாய் வசூலாகியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் படிப்படியாக மீனாட்சி அம்மன் கோயில் உண்டியல் வருமானம் அதிகரித்தே வந்துள்ளது. இடையில் பெருந்தொற்றுக் காலங்களில் மட்டும் உண்டியல் வருமானம் கணிசமாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் ஐந்தாண்டு காலமான 2008-2009 முதல் 2012-2013 வரை ரூ.24,83,73,164-ம், 2-ஆவது ஐந்தாண்டு காலமான 2013-2014 முதல் 2017-2018 வரை ரூ.40,31,85,880-ம், 3-ஆவது ஐந்தாண்டு காலமான 2018-2019 முதல் 2022-2023 வரை ரூ.35,05,01,869 (நவம்பர் 31, 2022 வரை) மீனாட்சி அம்மன் கோயில் உண்டியல் வருமானமாக வசூலாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
SM Prabu
நான் மணிகண்ட பிரபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை, எழுத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாக கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் பயணித்து வருகிறேன். அரசியல், நீதிமன்றம், அரசு சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். செய்திகளை தாண்டி அதன் பின்புலங்களை ஆராய்ந்து கட்டுரைகளாக தந்து வருகிறேன். பத்திரிகையாளராக சாமானிய மக்களின் குரலாக ஒலிப்பதில் எவ்வித சமரசமும் இன்றி பணியாற்றி வருகிறேன். Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக தற்போது பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி