ஆப்நகரம்

பகலில் கொத்தனார், இரவில் திருடர்: பிடிபட்டதே பெரிய கதை!

பகலில் கொத்தனாராக பணியாற்றிவிட்டு, இரவில் திருடராக வலம் வந்த நபரைத் தீவிர தேடுதல் வேட்டைக்குப்பின் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் தமிழ்நாடு முழுவதும் 30க்கும் மேற்பட்ட கட்டுமான பணி நடைபெறும் இடங்களில் நூதன முறையில் திருடி வந்துள்ளார்.

Samayam Tamil 27 Nov 2020, 11:41 pm
மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கட்டுமான நிறுவனங்களைக் குறிவைத்துக் கட்டிடத் தொழிலாளர் போல்க் கொத்தனார் பணியில் பகலில் சேர்ந்து பிறகு நோட்டமிட்டு அங்குள்ள பொருட்களை இரவில் திருடி 30க்கும் மேற்பட்ட இடங்களில் கைவரிசை காட்டிய பலே திருடனை மதுரை நாகமலைபுதுக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil பகலில் கொத்தனார், இரவில் திருடர்: பிடிபட்டதே பெரிய கதை!
பகலில் கொத்தனார், இரவில் திருடர்: பிடிபட்டதே பெரிய கதை!


கைது செய்யப்பட்டவரிடமிருந்து ரூ. 3 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 27 வெல்டிங் இயந்திரத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். மதுரை மட்டுமன்றி சிவகங்கை, பரமக்குடி ,கரிமேடு, புதூர், வாடிப்பட்டி பகுதிகளில் கட்டுமான நிறுவனங்களில் வைக்கப்பட்டிருக்கும் வெல்டிங் இயந்திரங்கள் திருட்டுப் போவதாக 30க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களுக்குப் புகார்கள் வந்தன.

இதையடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே நாகமலைபுதுக்கோட்டை போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளியைத் தேடத் தொடங்கினர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கைது... லஞ்சப் பணத்தைக் கையில் வைத்திருந்தார்!

இந்நிலையில் மதுரை மாட்டுதாவணி பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிந்த அந்த திருடரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அந்த நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திருட்டில் ஈடுபட்டது அலங்காநல்லூர் கரட்டு காலனி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது.

மணிகண்டன், பகலில் கட்டிடத் தொழிலாளராக பணியில் சேர்ந்து அங்குள்ள பொருட்களைத் திருடிக் குறைந்த விலைக்குச் சந்தையில் விற்பனை செய்வதை வாடிக்கையாக வைத்துக் கொண்டுள்ளார். மணிகண்டனைக் கைது செய்த நாகமலைபுதுக்கோட்டை போலீசார் அவரிடமிருந்து ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 27 வெல்டிங் இயந்திரங்களைப் பறிமுதல் செய்தனர். போலீசார் மணிகண்டனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி