ஆப்நகரம்

ஆன்லைன் லோன் ஆப்களால் தற்கொலைகள் அதிகம்: தடை வருகிறதா?

சட்டவிரோத கடன் வழங்கும் செயலிகளுக்குத் தடை கோரிய வழக்கை மார்ச் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யக் கால அவகாசம் கோரியதைத் தொடர்ந்து வழக்கை ஒத்திவைத்து உத்தரவு.

Samayam Tamil 8 Feb 2021, 6:42 pm
மதுரை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “வளர்ந்து வரும் நவீனக் காலத்தில் செல்போன் அனைவரும் பயன்படுத்தக்கூடிய சாதனமாக உள்ளது. செல்போன் மூலமாகக் கடன் பெறுவதற்காகப் பல புதிய செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலிகள் ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருகின்றன.
Samayam Tamil ஆன்லைன் லோன் ஆப்களால் தற்கொலைகள் அதிகம்: தடை வருகிறதா?


கடன் பெறுவதற்கான, பல்வேறு செயலிகள் புதிதாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. செல்போன் செயலி மூலம் கடன் பெறுபவர்களிடம் அதிகப்படியான வட்டி வசூலிக்கப்படுகிறது. செல்போன் செயலிகளில் கடன் தரும் அவர்கள் எந்தவிதமான சட்ட திட்டங்களையும் பின்பற்றுவது இல்லை. கடன்களைச் சரியாகச் செலுத்தவில்லை எனில், அவர்களின் புகைப்படங்களை வாட்ஸ்-அப் செயலியில் உள்ள உறுப்பினர்களுக்குப் பகிர்வது, செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தவறாகப் பேசுவது, மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதன் காரணமாக, கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்குத் தள்ளப்படுகின்றனர். கூகுள் செயலி மூலம் பஜாஜ் ஃபின்சர்வ், கேப்பிடல் ஃபர்ஸ்ட், கேஸ் இ, ஸ்மார்ட் காயின் உட்பட 50க்கும் மேற்பட்ட செயலிகள் இதுபோன்ற கடன்களை வழங்கி பணத்தை வசூல் செய்யும் முறையைக் கொண்டுள்ளன.

இவர்கள் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. இந்த செயலியில் கடன் பெற்ற ஆந்திராவைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். தமிழகம், ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களில் செயலி மூலம் கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. கடன் வழங்கும் பல செயலிகள் சீனா நாடுகளோடு கூட்டு வைத்து மறைமுகமாகச் செயல்படுவதும் தெரிய வருகிறது.

England, Scotland காவல்துறைக்கு இணையாக தமிழ்நாடு போலீஸ்: அமைச்சர் பேச்சு

இதனால் கடன் வழங்கும் செயலிகள் குறித்து மத்திய அரசு விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும். மேலும் ரிசர்வ் வங்கி இணையதளம் மற்றும் செயலி மூலம் கடன் வழங்குபவர்களை முறைப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட விரோதமாகச் செயல்படும் கடன் செயலிகளுக்குத் தடை விதித்து உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யக் கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள் வழக்கை மார்ச் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

அடுத்த செய்தி